தமிழர் திருநாளான தைத்திருநாளை அடிப்படையாகக் கொண்டு, தை மாதத்தைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக உலகெங்கும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் தலைவர்களின் வாழ்த்தும், பங்கேற்புமாக பெரிய அளவிலான விழாவாக தமிழரின் தைத் திருநாள் ஆண்டுக்காண்டு உலகளவில் தமிழரின் அடையாளமாக பரிணமித்து வருகிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கோடைக்கால விழாவாகவும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குளிர்கால விழாவாகவும் பொங்கல் கொண்டாட்டப்பட்டது.
பிரிட்டனும் கனடாவும் ஜனவரி மாதத்தை 'தமிழ் மரபுரிமைத் திங்கள்' ஆகப் பிரகடனப்படுத்தி, தைத்திருநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன.
தமிழர்களின் தொன்மை, வரலாறு, கலை, பண்பாடுகள் அந்நாடுகளில் மேன்மைபெறச் செய்வதற்கான முயற்சிகளில் அந்த நாடுகளின் தமிழ் மக்களும் அமைப்புகளும் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழ் மரபுடைமை மாதமாக ஜனவரி
பல இன கலாசாரங்கள் செழிக்கும் பெருநகரங்களில் ஒன்றான லண்டனில் முதன்முறையாக இந்த ஆண்டு தமிழர் மரபுடமை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து முழுவதும் பிரிட்டிஷ் அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் தங்கள் தொகுதி மக்களுடன் தமிழரின் அறுவடைத் திருநாளான தைப் பொங்கலைக் கொண்டாடினர்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அறிக்கையில், "நீண்ட காலமாக பிரிட்டிஷ் வாழ்க்கையின் ஓர் அங்கமாக தமிழர்கள் பின்னிப் பிணைந்துள்ளனர். தமிழர்கள் இல்லையெனில் நமது நாட்டில் ஒரு பெருங்குறை இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் சோஆஸ் பல்கலைக்கழக வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. இசை, நடனம், அறுசுவை விருந்தோடு நடந்த இவ்விழாவில் தமிழ் ஆய்வுக்காக, பிரிட்டன் தமிழ்க்கல்வி ஆதரவுடன் 150,000 பவுண்ட்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதில் லண்டன் சட்டமன்ற உறுப்பினர் நிக்கோலஸ் ரோஜர்ஸ் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
'இங்கிலாந்தின் தேசிய நல்வாழ்வு சேவைத் துறையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் மருத்துவர்களாகவும் செவிலியர்களாகவும் முன்கள மருத்துவப் பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
"ஆயிரக்கணக்கான தமிழர்கள் லண்டன் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். முதியோருக்கான நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பகங்கள் தமிழர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆஸ்ட்ரா ஸெனேக்கா தடுப்பூசியை உருவாக்கியதிலும் தமிழ் அறிவியலாளர்களின் பங்களிப்பு உண்டு," என்று நிக்கோலஸ் ரோஜர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் வெம்பிலி பகுதி சமூக நிலைய முன்றலில் லண்டன் தமிழ் வணிகர்கள் பொங்கல் விழாவை நடத்தினர்.
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரிட்டிஷ் தமிழ்ச் சமூக அமைப்பினால் கடந்த 17ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்பட்டது.
கனடாவில் சிறக்கும் தமிழ்
கனடாவில் 2010லிருந்து தமிழ்ப் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுகிறது. கனடாவில் வாழும் தமிழர்கள் அந்நாட்டின் சமூக, பண்பாடு, அரசியல், பொருளாதாரத்துக்கு அளித்துள்ள பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றம் தமிழ்ப் பாரம்பரிய மாதத்தை 2016ல் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
கலிஃபோர்னியாவில் தமிழ் மாதம்
அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சாக்ர மெண்டோ தமிழ் மன்றத்தின் முன்னெடுப்பில் முக்கிய நகரங்களான போல்சோம், ரோஸ்வில், ராக்லின், ரான்சோகோர்டோவா ஆகிய நகரங்களில் ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக இவ்வாண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் தமிழ் புலம்பெயர்ந்தோர் ஏறக்குறைய 60,000 பேர் வசிக்கின்றனர்.
அங்கு பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ் மொழி, இலக்கியத்தின் செழுமையைக் கொண்டாடுவது, தமிழர்களின் பாரம்பரியம், கலைகள் பண்பாட்டைப் போற்றி வளர்ப்பது, தமிழ் மக்களின் மொழி, மரபுகள், வரலாறு பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் வளர்த்தல், தமிழர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றிய சாதனைகளை எடுத்துரைத்தல், தமிழர்களின் வளர்ச்சியையும் சிறப்பையும் முன்னெடுப்பது, சாதனைகளை அங்கீகரித்து, வேர்களைக் கண்டறிவது, தமிழர்வரலாற்றைக் கொண்டாடுவது போன்ற பரந்த இலக்குகளுடன் ஜனவரி மாதத்தை தமிழ்ப் பாரம்பரிய மாதமாக இந்தச் சமூகங்கள் கொண்டாடி வருகின்றன.
சாதி, மத பேதங்களின்றி உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் தமிழர் சிறப்பும் பண்பாடும் உலகெங்கும் ஓங்க வழிவகுத்து வருகிறது.