ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூரின் மரபையும் அடையாளத்தையும் பற்றி சிங்கப்பூரர்கள் மேலும் தெரிந்துகொண்டு, போற்ற வேண்டும் என்ற நோக்குடன் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 'க்யூரோஸிட்டி' (curiocity) என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதில் புத்தாக்க முறையில் அமைந்துள்ள கலைப் படைப்புகள், புதையல் தேடல் விளையாட்டுகள், சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் ஆகிய அங்கங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
கம்போங் கிளாம், ஈசூன், பொங்கோல் ஆகிய மூன்று வட்டாரங்களில் இடம்பெறும் 'க்யூரோஸிட்டி' புதையல் தேடல்கள், சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.
இந்த முயற்சியில் பங்கேற்று 1,000 வெள்ளி வரையிலான பற்றுச் சீட்டுகளை வெல்ல, பொதுமக்கள் புத்தகங்களை இரவல் பெற்று, தேசிய நூலக வாரியத்தின் செயலியைப் பயன்படுத்தி உதவித் தடயங்கள் பெறலாம். இந்நிகழ்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை இடம்பெறும்.
மேலும், தேசிய நூலக கட்டடம் உட்பட நான்கு இடங்களில், 'ஆன்கோர் இன் தி சிட்டி' முதலிய கண்காட்சிகளையும் ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 3ஆம் தேதிவரை மக்கள் கண்டு களிக்கலாம்.
'க்யூரோஸிட்டி' கண்காட்சியோடு, பல்வேறு நேரடி, இணைய நடவடிக்கைகளை இவ்வாண்டு தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
தனது யூடியூப் தளத்தை பயன்படுத்தி, மரபு, உணவு வரலாறு, முதலியவற்றை சார்ந்த ஆவணப்படங்களையும் தேசிய நூலக வாரியம் ஏப்ரல் மாதத்தில் பதிவிடும். மேல் விவரங்கள் அறிய, https://curiocity.nlb.gov.sg/ என்ற இணையத்தளத்தை வாசகர்கள் நாடலாம்.

