சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தோடு இணைந்து, 'டூ குட் வித் ஃபூட்' எனும் 'உணவோடு நல்லவற்றைச் செய்' திட்டத்தை ஸ்ரீ நாராயண மிஷன் அறிவித்துள்ளது. ஸ்ரீ நாராயண மிஷனின் தாதிமை இல்லத்தில் தங்கியுள்ளோரின் நலன் பேணி, அவர்களுக்குத் தரமான உணவு வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்தோருக்கு உதவவும் அவர்களை மகிழ்விக்கவும் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கிறது, 'உணவோடு நல்லவற்றைச் செய்' திட்டம்.
"தாதிமை இல்லத்தில் தரப்படும் உணவை விரும்பிச் சாப்பிடுகிறேன். குறிப்பாக, தற்போதைய கொவிட்-19 சூழலில் கிடைக்கும் நல்ல உணவுக்காக நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். மேலும், இங்கு வசிக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து உண்ணும் வேளைகளில் நாங்கள் உற்சாகம் அடைகிறோம்," என்றார் ஸ்ரீ நாராயண மிஷனில் வசிக்கும் திருவாட்டி வனிதா.
சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
"மனதை நெகிழ வைக்கும் இம்முயற்சியில் ஸ்ரீ நாராயண மிஷனுடன் இணைவதில் சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது. இத்திட்டம், நமது மூத்தோருக்கு அன்பும் நம்பிக்கையும் அளிக்கிறது," என்றார் சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தின் செயலாளர், திரு ச. மகேந்திரன். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர், குறிப்பிட்ட உணவு வேளைக்கோ, அல்லது முழு நாளுக்கோ உணவு வழங்க உதவலாம்.

