நம் வீட்டில் உள்ள முதியவர்கள் சில சமயங்களில் வழுக்கி விழுந்து தங்கள் எலும்பை முறித்துக்கொள்வார்கள். சாதாரணமாக, கையைச் சுவரில் ஊன்றி அமரும்போதும் எழுந்து நிற்கும்போதும்கூட எலும்பு முறிவு ஏற்பட்டுவிடுகிறது.
இருப்பினும், இது வெறும் எலும்பு முறிவுதான் என்று எண்ணி சிகிச்சை நாடுவது மட்டும் முக்கியமல்ல.
'ஆஸ்டியோபொரோசிஸ்' எனப்படும் எலும்புப்புரை நோயாகவும் இது இருக்க வாய்ப்புண்டு என்பதை நாம் உணரவேண்டும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முதியவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்.
குழந்தைப் பருவத்தில் மென்மையாகத் தொடங்கி, வயது ஏற ஏற வலுப்பெற்று, பின் மீண்டும் முதுமைக் காலத்தில் தன் வலுவை இழந்து, நொறுங்கும் தன்மையுடையதாக மாறும் இயல்பை எலும்புகள் கொண்டுள்ளன.
இந்த நொறுங்கும் தன்மையைப் பெறும் நிலையே 'எலும்புப்புரை' ஆகும்.
அனைவருக்கும் இந்நோய் ஏற்படுவதில்லை என்றாலும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்கள் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உணர்வதில்லை என்பதே ஆபத்தான ஓர் உண்மை.
குறிப்பாக எந்தப் பிரிவினருக்கு எலும்புப்புரையால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது?
எலும்பில் உள்ள குறைந்த தாது மட்டுமே காரணமல்ல. முதுமைக் காலம், பெண் பாலினம், ஆசிய இனம், எலும்புப்புரையால் பாதிக்கப்பட்டதாக குடும்ப வரலாறு, உடல் பலவீனம் ஆகியவற்றையும் ஆபத்து காரணிகளாகக் குறிப்பிடலாம்.
மதுப்பழக்கம், புகைபிடித்தல், வைட்டமின் 'டி' குறைபாடு, சுண்ணாம்புச் சத்து குறைபாடு போன்றவற்றையும் காரணிகளாகக் குறிப்பிடலாம். இருப்பினும் இவற்றை மருத்துவ ரீதியாகச் செய்ய முடியும்.
முதுமையுடன் எலும்புப்புரை நோயும் கூடி வரக்கூடியதா?
முதுமைக் காலத்தில் எலும்புப்புரை ஏற்படும் சாத்தியம் அதிகமே. 40 வயதை நெருங்கும் நிலையில் ஆண் பெண் இருவரும் தங்களின் எலும்புத் திண்மையின் உச்சத்தை அடைந்துவிடுவர்.
இதையடுத்து, எலும்புத் திண்மையை இழக்கத் தொடங்குகின்றனர். மாதவிடாய் நின்றுவிடுவதுடன் தொடர்பிருப்பதால், எலும்புத் திண்மை இழப்பு ஆண்களைவிடப் பெண்களிடம் அதிக வீரியத்துடன் விரைவாகக் காணப்படும்.
மாதவிடாய் நின்ற ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், எலும்புத் திண்மையில் கிட்டத்தட்ட 12 விழுக்காட்டைப் பெண்கள் இழக்கிறார்கள்.
எலும்புப்புரை நோய் காரணமாகப் பெண்களிடம் ஏற்படும்
பாதிப்புகள் என்ன?
எலும்புப்புரையால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்து, 50 வயதுடைய ஒரு பெண்ணுக்கு 50 விழுக்காடும் 50 வயதுடைய ஓர் ஆணுக்கு 20 விழுக்காடும் உண்டு. மேலும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடமும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடமும் எலும்புப்புரையின் விளைவாக ஏற்படும் எலும்பு முறிவுகள் அதிகரித்து வருகின்றன.
பொதுவாக, எலும்புப்புரையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மணிக்கட்டு எலும்பு முறிவும், மாதவிடாய் நின்ற 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதுகெலும்பு முறிவும், 75 வயதுக்குப் பிறகு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்படலாம்.
பொதுவாக எந்தெந்த
எலும்புகள், எலும்புப்புரையால் முறிவுக்கு உள்ளாகக்கூடியவை?
முதுகெலும்பு, இடுப்பு, மணிக்கட்டு, மேற்கையின் நீண்ட எலும்பு ஆகியவை எலும்புப்புரையால் முறிவுக்கு உள்ளாகும் பெரிய எலும்புகள்.
வலி, எடையைத் தாங்க இயலாமை போன்ற அறிகுறிகளுடன் இடுப்பெலும்பு முறிவுகள் அமைந்திருக்கும். அதைச் சீரமைப்பதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
மற்ற அனைத்து வகையான எலும்பு முறிவுகளைக் காட்டிலும் இந்த எலும்பு முறிவே செயல்பாட்டு நிலையை வெகுவாகப் பாதிக்கக்கூடியது. வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கும். இறப்புக்கான ஆபத்தும் இடுப்பெலும்பு முறிவில் உண்டு.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவுகளின் ஆரம்பகால அறிகுறியே, முதுகெலும்பு முறிவு.நாள்பட்ட வலி, கூன் விழுதல், நரம்பியல் பிரச்சினைகள், நுரையீரல் திறன் குறைதல், தன்னம்பிக்கை இழப்பு போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.
முதுகெலும்பு முறிவுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்குக் கடுமையான வலியையோ, சில வாரங்களில் மறைந்துவிடும் லேசான வலியையோ கொண்டிருக்கும் என்பதால், இதை ஸ்கேன் மூலமாகவும் எக்ஸ்ரே மூலமாகவும் மட்டுமே கண்டறிய முடியும்.
ஒருவர் மூன்று செ.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தை இழந்தால் அது புதியதொரு முதுகெலும்பு முறிவாக இருக்கலாம் எனக் கவனத்துடன் அணுக வேண்டும்.
அடுத்தடுத்த முதுகெலும்பு, இடுப்பெலும்பு முறிவுகளின் முக்கியமான முன்னறிவிப்பாக மணிக்கட்டு எலும்பு முறிவுகள் கருதப்பட வேண்டும்.
கொடி முந்திரியும் எலும்புகளின்
ஆரோக்கியமும்
பல ஆரோக்கிய பலன்களைக் கொண்டது கொடி முந்திரி. எலும்பு ஆரோக்கியத்திற்கும் எலும்புப்புரை நோய் உள்ளவர்களுக்கும் இந்தப்பழத்தை உண்பதால் பலன் உண்டு என்று சில ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வைட்டமின் 'கே' அதிகமுள்ள பழம் என்பதால், கொடி முந்திரியைச் சாப்பிடுவதால் உடலின் சுண்ணாம்புச் சத்தைச் சமப்படுத்த முடியும் என்று 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசிய சுகாதாரக் கழகங்களின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
எலும்புப்புரை உண்டாகும் அபாயத்தைக் குறைக்கவும் கொடி முந்திரி உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.