ஆ. விஷ்ணு வர்தினி
அன்பர் தினத்துக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. இந்நிலையில், உங்களின் அன்புக்குரியவர்களுக்காக என்ன செய்வது என்ற திண்டாட்டம் வேண்டாம். எல்லோருக்கும் நன்கு பரிச்சயமான சிங்கப்பூரில், குடும்பமாகவோ தம்பதியாகவோ எங்குச் செல்வது என்ற தயக்கமும் வேண்டாம். உங்கள் பொழுதை அர்த்தமுள்ள வகையில் அன்பு நிறைந்த தருணங்களாகக் கொண்டாட சில வழிகள் உண்டு.
சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்
சிங்கப்பூரில் வசித்தாலும் நம்முடைய அன்புக்குரியவர்களுடன் அன்பர் தினத்துக்காக நாம் சுற்றுப்பயணிகளாக மாறிவிடலாம்.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் புதிய 'ரவுண்ட் ஐலண்ட்' பாதை உள்ளது. அதில் ஒன்றாக மிதிவண்டி ஓட்டிச் சென்றால், இயற்கை அழகில் திளைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சுமார் 75 கிலோமீட்டர் நீளமுடைய இப்பாதையே, சிங்கப்பூரின் ஆக நீளமான பொழுதுபோக்கு இணைப்புப் பாதை ஆகும். பூங்காக்களையும் இயற்கை அம்சமுடைய பல இடங்களையும் இப்பாதை இணைத்துள்ளதால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு உங்கள் அன்புக்குரியவருடன் உல்லாசமாக நடந்தும் செல்லலாம்.
பரபரப்பான நகரச் சூழலை விரும்பாத தம்பதியாக நீங்களும் உங்களின் அன்புக்குரியவரும் இருந்தால், லிம் சூ காங் பகுதியில் அமைந்துள்ள கால்நடை பண்ணைகளையும் மீன் பண்ணைகளையும் நாடலாம். அமைதியான இயற்கைச் சூழலில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அழகான தருணங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
செல்லப்பிராணிகளைக்
கொஞ்சலாம்
செல்லப்பிராணிகளுடன் பொழுதைக் கழிப்பதற்கெனப் பல செல்லப்பிராணி சிற்றுண்டி விடுதிகள் சிங்கப்பூரில் உள்ளன. நாய்கள், பூனைகள், முயல்கள் என்று பலவகையான மனங்கவர் பிராணிகளை வளர்க்கும் கஃபே விடுதிகள் மக்களை ஈர்த்து வருகின்றன.
இவ்விடுதிகளில் உணவருந்துவோர், அங்கே வளர்க்கப்படும் பிராணிகளுடன் நேரத்தைச் செலவழிக்கலாம்.
நாய்க்குட்டிகளுடன் சேர்ந்து யோகா முதலிய உடற்பயிற்சி செய்யும் மையங்களும் தற்போது சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளன. அன்புக்குரியவர் துணையுடன் செல்லப்பிராணிகளைக் கொஞ்சும்போது உங்களுக்கு நேரம் போவதே தெரியாது.
சேர்ந்து சமைத்துப் பார்க்கலாம்
சிலர் அன்பர் தினத்துக்காக தடபுடல் விருந்தை ஓர் உணவகத்தில் ஏற்பாடு செய்வர். ஆனால், வீட்டிலேயே சேர்ந்து சுவையாகச் சமைப்பதும் பேக் செய்வதும்கூட அதே பிணைப்பை உங்களின் அன்புக்குரியவருக்கும் உங்களுக்கும் தரும்.
சமைத்ததை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு சேர்ந்து சாப்பிடுவதும் இன்பமளிக்கும். சமைக்கத் தெரியாவிட்டால் என்ன? யூடியூப் காணொளிகளைப் பார்த்துச் சேர்ந்து சமைக்கலாமே!
கலைக்கூடங்கள் செல்லலாம்
உங்களின் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து 'ஆர்ட் ஜாமிங்' போன்ற ஓவிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம். தற்போது சில சிற்றுண்டி விடுதிகளிலும் தனியார் உணவங்காடிகளிலும் குழுக்களாக இந்த ஆர்ட் ஜாமிங் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
உங்களுக்கு ஓவியம் வரைய வரவில்லை என்றாலும், சேர்ந்து ஈடுபடும் இந்த நடவடிக்கையால் மறக்க முடியாத ஓர் இனிய அனுபவம் ஏற்படும் என்பது உறுதி.
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கலைக்கூடங்களையும் அரும்பொருளகங்களையும் அன்புக்குஉரியவர்களுடன் நீங்கள் சென்று காணலாம். 'சிங்கப்பூர் மியூசிக்கல் பாக்ஸ் அரும்பொருளகம்', 'விண்டேஜ் கேமரா அரும்பொருளகம்' ஆகியவை அதிகம் அறியப்படாத இடங்களாகும். அங்கு உங்களின் அன்புக்குரியவர்களை அழைத்துச் சென்று அவர்களுடன் ஒரு 'செல்ஃபி' எடுத்துக்கொள்ளலாமே!
அன்பர் தினத்துக்கு உங்கள் திட்டம் என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தமிழ் முரசின் சமூக ஊடகப் பக்கங்களில் உங்களின் படங்கள் அல்லது காணொளிகளைப் பதிவேற்றம் செய்யலாம். அல்லது tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.

