ஈராண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூர் புத்தக மன்றம் வழங்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு நூல்களை அனுப்பி வையுங்கள்.
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளான சீனம், ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகியவற்றில் புதினம், அபுதினம், கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும்.
18 வயது நிரம்பிய சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இப்போட்டிக்கு தாங்கள் எழுதிய நூல்களை அனுப்பலாம். 01-01-2020க்கும் 31-12-2021க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் படைப்பு வெளியீடு கண்டிருக்க வேண்டும்.
மறுபதிப்புகள், முந்தைய ஆண்டு களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள் அல்லது மறு வெளியீடுகள் ஆகியவை போட்டிக்குத் தகுதி பெறாது. போட்டியின் 12 பரிசுப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் வெற்றியாளருக்கு $3,000 ரொக்கமும் பரிசுக் கிண்ணமும் வழங்கப்படும்.
கடந்த 1992ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூரின் ஆக உயரிய இலக்கியப் பரிசான சிங்கப்பூர் இலக்கியப் பரிசை இதுவரையில் தொண்ணூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர். போட்டிக்கு நூல்களை அனுப்பி வைப்பதற்கான கடைசி நாள்: 18.2.2022.
விண்ணப்பப் படிவத்துக்கும் மேல்விவரங்களுக்கும் https://www.bookcouncil.sg/offcanvas-awards/offcanvas-slp/offcanvas-singapore-literature-prize-2022 என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கலாம்.

