எண், எழுத்துப் புதிர்களுக்கு விடைகாணும் பழக்கம் இருந்தால் முதுமையிலும் மூளை கூர்மையாகச் செயல்படலாம் என்பது ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
குறுக்கெழுத்து, சுடோக்கு போன்ற புதிர்களுக்கு விடைகாணும் பழக்கமுடைய 50 மற்றும் அதற்குமேல் வயதுடையோர், அத்தகைய பழக்கம் இல்லாதோரைக் காட்டிலும் அறிவாற்றல் சோதனைகளில் மேம்பட்ட தேர்ச்சி பெற்றதை ஆய்வு முடிவுகள் காட்டின.
அத்தகைய புதிர்களைப் போடும் பழக்கமுடையோர், தங்களைவிட எட்டு வயது குறைந்தவர்களுக்கு இருப்பது போன்ற அறிவுத்திறனைக் கொண்டிருந்தது தெரியவந்தது.
பிரிட்டனின் எக்ஸிட்டர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 50 முதல் 90 வயதுக்குட்பட்ட 22,000க்கு மேற்பட்டோரிடம் இணையம் வழியாக ஆய்வு மேற்கொண்டனர். 'புரொடெக்ட்' எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வின்மூலம், அவர்கள் எத்தனை முறை எழுத்து, எண் புதிர்களைப் போடுகிறார்கள் என்று கணக்கிட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கவனித்தல், பகுத்தறிதல், நினைவாற்றல் போன்ற அறிவுத்திறன் சார்ந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். வயது சார்ந்து மூளையில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதற்காக அத்தகைய அறிவாற்றல் சோதனைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனை முடிவுகள் வியப்பளிக்கும் வகையில் இருந்தன.
குறுக்கெழுத்துப் போடும் பழக்கமுள்ளவர்களின் மூளைச் செயல்பாடு, அவர்களைக் காட்டிலும் பத்து வயது குறைந்தவர்களின் மூளைச் செயல்பாட்டிற்கு நிகராக இருந்தது தெரியவந்தது.
'புரொடெக்ட்' ஆய்வானது 25 ஆண்டுகால ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அதன் பங்கேற்பாளர்களின் மூளைச் செயல்பாடு மதிப்பிடப்படும். என்னென்ன வாழ்க்கைமுறைத் தெரிவுகள், முதுமையில் நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்த காரணமாக இருக்கலாம் என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம்.
ஆய்வுக் கட்டுரை 'அனைத்துலக முதுமை உளவியல் சஞ்சிகை'யில் வெளியிடப்பட்டுள்ளது. புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது முதுமையில் மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்றோ, மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்திடும் என்றோ உறுதியாகக் கூறவில்லை.
ஆயினும், புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவோர், வயதானாலும் தங்களது மூளையின் செயல்பாட்டைப் பாதுகாக்கும் தன்மையை இயற்கையாகவே கொண்டிருக்கலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகளை ஒத்துள்ளன.
'புராங்ஸ் ஏஜிங்' என்ற அந்த ஆய்விலும் குறுக்கெழுத்துப் போடும் பழக்கமிருப்போர், அறிவுத்திறன் மங்குவதைத் தள்ளிப்போடலாம் என்பது கண்டறியப்பட்டது.

