கி.ஜனார்த்தனன்
இசையிலும் தமிழிலும் ஆர்வம் கொண்டுள்ள நல்ல நண்பர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது உருவாக்கிய 'அபிஷ்டு கலெக்டிவ்' என்ற இசைக்குழு, 'ஒரு மயக்கம்' என்ற பாடல் காணொளியை வெளியிட்டுள்ளது. சொந்தமாகவே பாடல்களைத் தயாரிக்கும் இந்த மூவர் குழுவின் பாடல், இதுவரை 2,800 பார்வைகளை ஈர்த்துள்ளது.
மேலோட்டமாகக் கேட்டால் இப்பாடல் 'பாப்' காதல் பாட்டு என்று வகைப்படுத்தலாம்.
ஆயினும், மேற்கத்திய மெல்லிசையுடன் கலந்த கர்நாடக இசைக்கூறுகளைக் கொண்ட இந்தப் பாடல், மனதில் பதியும் விதத்தில் எளிமையாக உருவாகியிருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். காதல் வயப்பட்ட என் நண்பர் ஒருவர் அதனை வெளிப்படுத்தாமல் இருந்ததை மையப்படுத்தி பாடலை எழுதியதாக சரவண ராமா,32, தெரிவித்தார்.
சிறு வயது முதல் தபலாவைப் பயின்ற லலித் குமார் கணேஷ், 32, ஸ்பெயினில் பெர்க்கலி இசைத்துறை பட்டக்கல்வி பயின்றவர். தமது நண்பர் சரவணா ராமாவை அவர் சந்தித்தப்போது சொந்தமாக பாடலை அமைக்கும் யோசனை தோன்றியது.
"நாங்கள் இருவரும் பல்வேறு வகையான பாடல்களை ஒன்றாகக் கேட்டு அதனைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடுவோம். தமிழ் வரிகளுடன் இசை எப்படி சேர்க்கப்படுகின்றன என்பதை ஆராய்வோம்," என்று அவர் கூறினார். குறிப்பாக, 'இண்டி' வகை இசைக்குள் தமிழ் வரிகளைப் புகுத்திய கேபர் வாசுகியின் பாணி முன்மாதிரியாகத் திகழ்வதாக இவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவர்கள், மூன்று வாரத்திற்குள் இந்தப் பாடல்களைத் தயாரித்து முடித்தனர். மற்றொரு பாடலுக்கான இசையை உருவாக்கிய நேரத்தில் 'ஒரு மயக்கம்' என்ற பாடலுக்கான இசை வரிகள் திரு லலித் மனதில் தோன்றின. தமது நண்பர் சரவணா ராமா, தமிழ்க்கவிதைகளை எழுதக்கூடியவர் என்று தெரிந்த திரு லலித், அவரை அணுகி பாடல் எழுதும்படி கேட்டார். பாடல்களுடன் படக்காட்சியைக் கோக்கும் திறனையும் லசால் கலைப்பள்ளியில் திரைத்துறையில் பட்டம் பெற்ற திரு ராமா, அதனையும் பயன்படுத்தினார்.
இருவருமே தொடக்கத்தில் வேறு துறைகளில் இளநிலைக் கல்வியைப் பயிலத் தொடங்கி பின்னர் கலைத்துறைக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 'என்வரைமண்டல் என்ஜினியரிங்' பயின்ற திரு லலித், அத்துறையில் சில ஆண்டுகள் பயின்ற பிறகு இசைத்துறையை தமக்கு வாழ்க்கைத்தொழில் ஆக்கிக்கொள்ள முடிவு செய்தார்.
அதே போல திரு ராமா மக்களின் வழக்கமான மனப்போக்கிற்கு முரணாகச் செயல்படும் தங்களது மனப்பான்மையை 'அபிஷ்டு' என்ற பெயர் பிரதிபலிப்பதாக இந்தக் குழுவின் ஒரே பெண் உறுப்பினர் ஷ்ரேயா பாட் தெரிவித்தார்.
மற்ற இரண்டு கலைஞர்களின் பணியை சரிபார்த்து அவர் விளம்பரப்படுத்துகிறார். "தமிழ்ப் பாடல்களை நல்ல இசையின் மூலமாக தமிழ் புரியாதோருக்கும் சேர்க்கலாம். நன்றாக எழுதப்பட்ட வரிகளின் இசை, பொருள் புரியாதோரையும் ஈர்க்கும்," என்று இந்தி பேசும் ஷ்ரேயா கூறினார்.
முதல் பாடல் அனுபவம் மகிழ்வூட்டியதாகக் கூறிய இம்மூவர், மேலும் பல பாடல்களை விரைவில் தயாரிக்கவுள்ளனர்.

