சிங்கப்பூரின் 21 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து உலகத் தாய்மொழி நாளை 21.2.22 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடின. அதற்கு அனைத்து அமைப்புகளையும் இணைத்துச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்தது. இணையத்தில் குவியம் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், உலகத்
தாய்மொழி நாளை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் யுனெஸ்கோ என்னும் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்ததற்கான வரலாற்று நிகழ்வுகளை விளக்கினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பேராசிரியர், முனைவர் சுப. திண்ணப்பன், எது தாய்மொழி என்பதை விளக்கி, அதனை இன்னும் விரிவான முறையில் காண வேண்டும் என்றும் பண்பாட்டை கற்றுத் தருவது தாய்மொழி என்றும் கூறினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. தினகரன், ஐக்கிய நாட்டு நிறுவனம் 1999ஆம் ஆண்டுதான் உலகத் தாய்மொழி நாளை அறிவித்தது; ஆனால் நமது நாட்டின் தந்தை திரு. லீ குவான் இயூ தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1965ஆம் ஆண்டிலேயே இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்ததை நினைவுகூர்ந்தார்.
தமிழர் பேரவை சார்பில் உரையாற்றிய அதன் உதவித் தலைவர் திரு. அருண் வாசுதேவ் கிருஷ்ணன் தமிழ் மொழியைப் பொருளியல் மொழியாக வலுவடையச் செய்ய வேண்டும் என்று கூறினார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு. மு. ஹரிகிருஷ்ணன்அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒற்றுமையுடன் இந்த நிகழ்வில் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இந்நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. தனபால் குமார், தமிழ் மாணவர்களுக்கு உதவ பெற்றோர் வீட்டில் அவர்களுடன் தமிழில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தாய்மொழியை மறந்தால் அடையாளம் தொலைந்துவிடும் என்று எச்சரித்த சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் மதியுரைஞரும் முன்னாள் தலைவருமான திரு. நசீர் கனி பிபிஎம், தாய்மொழிக்கு அரசாங்கம் நிறைய உதவிகள் செய்வதைச் சுட்டினார்.
சங்கம் வைத்து வளர்க்கப்பட்டது தமிழ் மொழி என்று குறிப்பிட்ட சிங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவி திருவாட்டி விஜி ஜெகதீஷ் பிபிஎம், தமது அமைப்பில் இளையர்களைத் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவர முயன்று வருவதாகத் தெரி வித்தார்.
சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் துணைச் செயலாளர் திரு. வீ. காசிநாதன், ஹாங்காங்கில் இரண்டு பாகிஸ்தானியர்கள் சந்தித்துத் தங்கள் தாய்மொழியான உருது மொழியில் உரையாடியதால் ஒருவரின் தற்கொலை முடிவே மாறியதாகத் தெரிவித்தார்.
கவிமாலைக் காப்பாளர் திரு. மா. அன்பழகன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்றும் சிங்கப்பூரின் தமிழ் அமைப்புகளுக்கென தமிழ் வாழ்த்து உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. தி. ஜோதிநாதன் தமிழாசிரியர்களை உருவாக்குவதில் தங்கள் பள்ளி அடித் தளமாக விளங்கியதாகக் குறிப்பிட்டார்.
அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழுவின் செயலாளர் திரு. முத்தழகு மெய்யப்பன், தமிழ் அறிவிப்புகளில் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தம் கொண்டுவர, தமிழர் பேரவை உள்பட அனைத்து அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர்க் கிளையின் தலைவர் முனைவர் அப்துல் காதர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கும் இந்த உலகத் தாய்மொழி நாள் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகக் கூறினார்.
சிங்கப்பூர் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பொருளாளர் திருவாட்டி தமிழ்ச்செல்வி பிள்ளை களைத் தமிழில் பேச வைக்க பெற்றோர் முயல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு. சி. சிவபாலன், நமது தாய்மொழியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டு மென்று கூறினார்.
மக்கள் கவிஞர் மன்றத்தின் செயலவை உறுப்பினர் திரு. உத்திராபதி விழுமியங்களுக்கும் விழிப்புணர்வுக்கும் தாய்மொழி அவசியம் என்றார்.
தமிழவேள் நற்பணி மன்றச் செயலவை உறுப்பினர் செல்வி கலைவாணி இளங்கோ, புத்தாக்கத்துடன் தகவல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி அடுத்த தலை முறைக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகத் தலைவர் திரு. பெ. அருமைச்சந்திரன் தொடர் பட்டி மன்றங்களின் மூலம் தாங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுவதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவைத் தலைவர் திரு. விஜயராஜ், இளையர்களைத் தமிழ் மீது பற்றுகொள்ளச் செய்யவும் பண்புகளையும் நெறிகளையும் அவர்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் தாங்கள் நிகழ்ச்சிகளை அமைப்பதாகக் கூறினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவி செல்வி மிருதுளா குமார் இளையர்களுக்குத் தமிழ் மொழி மீதும் இலக்கியங்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படும் வகையில் தாங்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதாகத் தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய அண்ணா மலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் சிங்கப்பூர்க் கிளையின் தலைவர் திரு. சவுந்தர்ராஜன், மொழி நமது பண்பாட்டின் விழி என்றும் மொழி யில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை என்றும் கூறினார்.
எழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகா நிகழ்ச்சியை நெறிப்படுத்த இறுதியில் துணைச் செயலாளர் திரு. கோ. இளங்கோவன் நன்றி கூறினார்.

