மாதங்கி இளங்கோவன்
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் ஏராளமானவற்றில் கடலில் செல்லும் கப்பல்களையும் சொல்லலாம்.
கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களும் மக்களை ஏற்றிச் செல்லும் பயணக் கப்பல்களும் சுற்றுச்சூழலை மாசு படுத்தும் வகையில் பல ஆபத்தான இரசாயனங்களை ஆகாயத்திலும் நீரிலும் வெளியிடுகின்றன.
நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்களையும் நம் புவியையும் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு 'எனர்ஜி அப்சர்வர்' என்னும் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
'எனர்ஜி அப்சர்வர்' எனப்படும் புதுமையான இந்தக் கப்பல், கரியமில உமிழ்வை வெளியிடாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காமல் பயணம் செல்லும் இந்த பிரம்மாண்டமான கப்பல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் இயங்குகிறது.
பிரான்ஸ் நாட்டின் செயின்ட் மாலோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த பிரம்மாண்ட எனர்ஜி அப்சர்வர், 2017ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை உலகத்தை வலம் வரும்.
ஆசியாவில் அதன் முதலாவது பயணம் சிங்கப்பூரில் தொடங்கிய பின்னர், தாய்லாந்து, இந்தோனீசியா என பல நாடுகளுக்கும் இக்கப்பல் பயணம் செல்லும்.
எரிவாயு, சூரிய சக்தி, நீர் சக்தி என இயற்கையான மூலப்பொருள்களைக் கொண்டே எனர்ஜி அப்சர்வர் செயல்படும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரஞ்சு அதிபர், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் குறித்த நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சி இலக்குகளின் பிரஞ்சுத் தூதர், யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் மரபுடைமை, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு முக்கியமான தனிமனிதர்களும் அமைப்புகளும் தங்கள் ஆதரவை இக்கப்பலுக்கு அளித்துள்ளனர்.
பொறியாளர்களும் ஆய்வாளர்களும் புது தொழில்நுட்பங்களை உருவாக்கி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியைப் பயன்படுத்த, எனர்ஜி அப்சர்வர் ஓர் ஆய்வுக்கூடமாகத் திகழ்கின்றது.
ஏரிவாயு, பேட்டரிகள், சூரிய சக்தி, காற்று சக்தி போன்றவை கடுமையான கடல் சூழல்களில் சோதிக்கப்படுகின்றன.
இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எரிசக்தியைக் கொண்டுதான் நாற்பதாயிரத்துக்கும் மேலான கடல் மைல்களைத் தாண்டி பயணித்துள்ளது,
எனர்ஜி அப்சர்வர். இதுவரை எனர்ஜி அப்சர்வர் கப்பலைப் பற்றி 13 ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏழாண்டு கடல் சுற்றுலாவில், எனர்ஜி அப்சர்வரின் நிபுணர்கள் வேளாண்மை, எரிசக்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைச் சந்தித்து சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் வகையில் எவ்வாறு நிலையாக வாழலாம் என கலந்துரையாடினர்.
இவ்வாறு உலகில் வாழும் அனைவருக்கும் உதவ விரும்பும் எனர்ஜி அப்சர்வரின் முயற்சிகள் பாராட்டக்கூடியவை.
இக்கப்பலை நிர்வகிக்கும் குழுவினர் கப்பலின் மூலம் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய கடலில் பயணம் செய்தவாறு பாடுபட்டு வருகின்றனர்.
கப்பலில் பயணம் செய்யும் ஆய்வாளர் குழுவில் எரிசக்தித் துறை வல்லுநரான விஞ்ஞானியான பிட்ரிஸ் கொர்டியானொவும் ஒருவர்.
"அதிமான நாட்கள் நம் வேலையை கப்பலிலேயே செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் கப்பலில் இருக்கும் மற்ற வல்லுநர்களோடு வலுவான உறவுகளை வளர்க்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவர்களோடு சேர்ந்து பணியில் ஈடுபடுவது இன்பமான அனுபவமாக உள்ளது.
"மேலும், அதே நேரத்தில் நமது பணி பிற்காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மற்றவர்களுக்கும் எழுச்சியூட்டும் என நினைக்கும்போது அதில் பெருமிதம் கொள்கிறோம்.
"இனி கப்பல்கள் சுற்றுப்புறத்திற்கும் கடல் உயிரினங்களுக்கும் இரசாயன உமிழ்வு ஏற்படுத்தாமல் செயல்பட நமது முயற்சிகள் உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதில் எனர்ஜி அப்சர்வர் பெருமை கொள்கின்றது," என்று கூறினார் பிட்ரிஸ்.
ஒவ்வொரு நாட்டிலும் நிறுத்தப்படும்போது,
இக்கப்பலைப் பற்றியக் கண்காட்சி ஒன்று திறக்கப்படும். சுவாரசியமான உத்திகளைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதத்தில் இக்கண்காட்சி அமைந்துள்ளது.
செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமையும் கண்காட்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 300,000 பேர் வந்து பல புதுமையான தொழில்நுட்பம் பற்றி அறிந்து சென்றனர்.
மின்னியல் கண்காட்சியாக அமையும் இது, எரிசக்திகளின் வரலாற்றைப் பற்றியும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பற்றியும் தனிமனித நடைமுறைகளின் வரலாற்றையும் ஆராயும் வகையில் அமைந்துள்ளது.
புத்தாக்கச் சிந்தனையோடு உருவாக்கப்பட்ட எனர்ஜி அப்சர்வர் என்னும் கப்பல் சிங்கப்பூரில் மார்ச் பத்தாம் தேதி முதல் இருபதாம் தேதி வரை மரினா ஒன்15 செந்தோசா கோவ்வில் நிறுத்தி வைக்கப்படும்.
கீழ்க்கண்ட இணைய முகவரி வாயிலாக இக்கண்காட்சிக்கு வருகையளிக்க முன்கூட்டியே பதிவு செய்யலாம். https://sgmarineguide.com/energy-observer/

