மனப்பதற்றத்துக்காக சிகிச்சையை நாடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 80 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, சிங்கப்பூர் மனநல உள்ளாய்வு நிலையம் தெரிவித்தது.
மனப்பதற்றத்தால் பலர், தங்களது வாழ்க்கை முறையில் நிகழ்ந்த மாற்றங்களை உணர்ந்தனர். உறங்குவதிலும் உணவு உண்பதிலும்கூட அவர்கள் இயல்புநிலையில் இருந்து சற்று நழுவியிருந்தனர்.
எந்தவொரு நடவடிக்கையிலும் இயல்பாகவும் முழுமையாகவும் கவனம் செலுத்துவது என்பது அவர்களால் இயலாத ஒன்றாய் இருப்பதை அவர்களால் உணர முடிந்தது.
"வேலை, குடும்பம், ஆரோக்கியம், தனது நிதி நிலைமை ஆகியவற்றை எண்ணி பலர் மனப்பதற்றத்திற்கு ஆளாகின்றனர்.
"ஆனால், அவர்கள் அனைவரும் மனக்கலக்க நோயால் பாதிக்கப்படவில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவதிப்படுவர்.
"இவர்களது பதற்ற நிலையின் தீவிரமும் கால அளவும் அதிகமாக இருக்கும்," என்றார் சிங்கப்பூர் மனநல உள்ளாய்வு நிலையத்தின் மூத்த உதவி இயக்குனர் வூன் யென் சிங்.
மனப்பதற்றம்
நாம் அனைவரும் அவ்வப்போது மனப்பதற்றத்தை உணர்வோம். இந்தப் பதற்றம் மனவுளைச்சலினால் நம் உடலில் ஏற்படும் இயற்கையான எதிர்வினையாகும்.
மனப்பதற்றம், மூச்சுத்திணறல் போன்ற உடல் சார்ந்த அறிகுறிகளையும், அச்சம் போன்ற உளவியல் அறிகுறிகளையும் உள்ளடக்கும்.
"குறைந்த அளவில் ஏற்படும் மனப்பதற்றம் அசௌகரியமாக இருந்தாலும், சில சூழ்நிலைகளில் செயல்திறனை மேம்படுத்தவும் கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கவும் உதவுகிறது," என்றார் மனநல மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் லாவ் பூன் ஜியா.
மனப்பதற்றமும் மனக்கலக்கமும்
அளவுக்கு மீறிய மனப்பதற்றத்தால் ஒருவர் நீண்ட காலம் அவதிப்பட்டால், அவருடைய செயல் திறன் பாதிப்படைகிறது. இதை மனநல மருத்துவர்கள் மனக்கலக்க நோய் என்று வகைப்படுத்துகின்றனர்.
சிங்கப்பூரர்கள் அதிகமாக மனப்பதற்றத்திற்கு ஆளாகின்றனரா அல்லது மனக்கலக்கத்திற்கு ஆளாகின்றனரா என்று கூறுவது சற்றுக் கடினம்.
இருப்பினும் 2016ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மனநலக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், புள்ளிவிவரங்களின் தரவுகளின்படி பொதுவான மனப் பதற்ற நோய் வாழ்நாள் பரவலில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதேவேளையில், மனநலம் குறித்த கல்வியறிவு மக்களிடைய அதிகரித்துள்ளது. எனவே, இதுபோன்ற மனப்பதற்ற அறிகுறி தென்பட்டதும் மருத்துவர்களின் ஆலோசனையை நாடி வருவதும் அதிகரித்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
"கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 தொற்று பலருக்கும் வெவ்வேறு வழிகளில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏற்கெனவே, மனதளவில் அதாவது மனப்பதற்றம், மனக்கலக்கம் ஆகிய நோய்களை எதிர்நோக்கியவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
"மனப்பதற்றம் ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் அவர்களது மனப்பதற்றத்தின் அளவை நிர்ணயிக்கும்.
"இக்காரணங்கள் அகன்றால், மனப்பதற்றமும் அகலும். ஆனால் மனக்கலக்க நோய் உள்ளவர்களுக்கு, இக்காரணங்கள் அகலுவதால் முன்னேற்றம் ஏற்படாது," என்றார் கிளினிகல்ஸ் மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் லிம் பூன் லெங்.
மனக்கலக்க நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக கவலை கொள்வதோடு, தூக்கமின்மை, படபடப்பு, எரிச்சல், சோர்வு, தசைவலி, தலைவலி, வயிற்றுவலி, எதிலும் கவனம் செலுத்த இயலாமை போன்ற அறிகுறிகளில் மூன்றையாவது அனுபவிப்பார்கள்.
"தைராய்டு, நீண்ட கால மன உளைச்சல், மரபியல், குழந்தைப் பருவத்தில் வன்கொடுமை போன்ற காரணங்கள் ஒருவருக்கு மனக்கலக்க நோயை உருவாக்கும் ஆபத்தை அதிகரிக்கும்," என்று டாக்டர் லிம் பூன் லெங் தெரிவித்தார்.
"மனக்கலக்க நோய்க்கு இரு முக்கிய சிகிச்சை முறைகள் உள்ளன. அவை மருந்து மற்றும் உளவியல் சிகிச்சையாகும். உளவியல் சிகிச்சை நமது பதற்ற எண்ணங்களை மறுவடிவமைக்க நமக்குப் பயிற்சியளிக்கும்.
"மனப்பதற்றத்தைக் கையாள்வதற்கு உடற்பயிற்சி, போதுமான அளவு ஓய்வு, பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
"மனக்கலக்க நோயாலும் மனப்பதற்றத்தாலும் அவதிப்படுவோருக்கு சமூகத்தின் ஆதரவு அவசியம்.
"வேலையிடங்களும் குடும்பத்தாரும் இவர்களுக்குப் பக்கபலமாக இருந்து ஆதரவளிப்பது இன்றியமையாததாகும் என்றார் டாக்டர் லிம் பூன் லெங்.
"மனப்பதற்றம் உள்ளவர்களின் அனுபவத்தைப் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், அதனைப் புறக்கணிக்கக் கூடாது. மாறாக, அந்நபருக்கு உதவ முயற்சி செய்ய வேண்டும்", என்று வூன் யென் சிங் கூறினார்.
"ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை நாடுவது மனப்பதற்றத்துக்குச் சிகிச்சையளிக்கவும், பாதிப்பைக் குறைக்கவும் உதவும்," என 'டிடிஎபி' மருந்தகத்தின் டாக்டர் கொ லிட் சிங் வலியுறுத்தினார்.
மனநலம் குறித்து அதிக விழிப்புணர்வு
பதினேழு வயதில் தனது மனப் பதற்றத்துக்காக மருத்துவரை நாடிய வியானோ ஸ்ப்ருயிட், 25, புறக்கணிக்கப்பட்டார்.
"துணிச்சலை வரவழைத்துக்கொண்டு உதவி நாடுவது எளிதல்ல. மருத்துவரிடமிருந்து உதவி கிட்டாது என நான் எண்ணவில்லை," என்றார் வியானோ ஸ்ப்ருயிட். நரம்பியல் சார்ந்த பிரச்சினை காரணமாக இவருக்கு தன்னிச்சையாக நடுக்கங்கள் ஏற்படும்.
"பொது சூழ்நிலைகளில் கை நடுக்கங்கள் அதிகரிப்பதோடு, இவரது நடை ஒருங்கிணைப்பில்லாமல் போகும். ஆதலால் தனது தேசிய சேவையின்போது, தன்னைப்போல் அவதிப்படும் மக்களுக்காக ஒரு நிகழ்நிலைத் தளத்தை உருவாக்கினார். நிகழ்நிலை 'புல்லட்டின்' எனப்படும் இந்த இணையத்தளத்தில் மக்கள் தங்களது மனநலனை நிர்வகிப்பதற்கான அனுபவங்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். தற்போது இந்தப் புல்லட்டின் 'டெலிகிராம்' 'டிஸ்கார்ட்' போன்ற தளங்களில் 'ஹடல்ஹுமன்ஸ்' என்ற பெயரில் உள்ளது.
கொவிட்19 தொற்றுநோய்க்குப் பிறகு, இதுபோன்ற பல மனநலன் சார்ந்த செயல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.