புனித ரமலான் மாதம் வருவதற்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் 'நிஸ்ஃபு ஷாபான்' எனும் பராஅத் இரவு நேற்று முன்தினம் மாலை சிறப்பாகப் பள்ளிவாசல்களில் கொண்டாடப்பட்டது.
கொவிட்-19 நோய்ப்பரவலை சமாளிக்க நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இரண்டு ஆண்டுகளில் காணாத கண்கொள்ளாக் காட்சியாக பள்ளிவாசல்கள் நிறைந்திருந்தன.
மேலும் இடைவெளியின்றி அரு கருகில் நேர்வரிசையில் தொழுகை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பையும் வழிபாட்டாளர்கள் பெற்றனர். நோய்ப் பரவல் தொடங்கிய காலத்திலிருந்து பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. பின்னர் திறக்கப்பட்டாலும் முன்பதிவு, தூர இடைவெளி, தனித்தனி குழுக்களாக 'ஸோன்' களில் தொழுவது என பல கட்டுப்பாடுகளைச் சந்தித்து, சமாளித்து வந்தோருக்கு நேற்று முன்தினம் பெரும் நிம்மதியும் மன நிறைவும் கிடைத்ததாக அப்துல் கஃபூர் பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர் முஹம்மது சித்திக் தெரிவித்தார்.
மக்ரிப் தொழுகை தொடங்கி, இஷா வரை டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள இப்பள்ளிவாசலில் நடந்த இந்தச் சிறப்புத் தொழுகை மற்றும் நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 450 பேர் கலந்துகொண்டனர்.
மறுமேம்பாட்டுப் பணிகள் நடந்துவரும் பென்கூலன் பள்ளிவாசல், இந்த சிறப்பு நாளை முன்னிட்டு பயான் பேருரையையும் துஆவையும் இணையம்வழி நடத்தி, வீட்டிலிருந்தபடியே மக்கள் பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
"இந்தக் காட்சியைப் பார்த்ததில் கண்கள் கலங்கிவிட்டன. அனைவரும் ஒன்றிணைந்து தொழுகை நடத்தும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதற்கு இறை
வனுக்கு நன்றி கூறவேண்டும்," என்றார் துணைத் தலைவர் திரு முகம்மது இத்ரீஸ்.
அதே நேரத்தில் அனைவரும் முகக்கவசங்களை அணிந்து, தனிப்பட்ட தொழுகை பாய்களை எடுத்துவந்து பொறுப்புடன் இருக்கும்படியும் அவர் நினைவுறுத்தினார்.
அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பாக நடைபெற்ற இந்தக் கொண்டாட்டங்களை அடுத்து எதிர்வரும் ரமலான் மாத 'தராவிஹ்' தொழுகைகளும் இதர வழிபாடுகளும் சிறப்பாக, அதிகம் பேருடன் நடைபெறும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

