ஃபேரர் பார்க் மருத்துவமனையில் வீற்றிருக்கும் ஆளுயர ஆப்பிள்களையும், 'தி இன்டர்லேஸ்' வளாகத்தில் நடனமாடும் சிவப்பு மிளகாயையும் சிங்கப்பூரர்கள் கண்டிருக்கக்கூடும். சிங்கப்பூர் தலங்களுக்கு அழகு சேர்க்கும் தனித்துவமான இச்சிலைகளின் பின்னணியில் உள்ளவர், தமிழரான திருவாட்டி குமாரி நாகப்பன்.
ஓவிய, சிற்பக் கலையில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருக்கிறார் 69 வயது திருவாட்டி குமாரி. தனது 37வது வயதில் உட்புற வடிவமைப்புப் பணியை விட்டு, முழுநேர ஓவியக் கலைஞராக இவர் பரிமாணம் கண்டார்.
சாங்கி விமான நிலையத்தில் சிதறிக் கிடந்த பெரிய ஆனைக் குண்டுமணிச் சிலைகள், 'ஐயோன் ஆர்ச்சர்ட்' கடைத்தொகுதிக்கு வெளியில் இருந்த ஜாதிக்காய் சிலை, தேசிய அரும்பொருளகத்தின் வெளியில் நின்ற குண்டுமிளகாய் சிலை ஆகிய பிரபல சிலைகளை திருவாட்டி குமாரி வடிவமைத்திருந்தார்.
வரலாற்றிலும் கலாசாரத்திலும் திருவாட்டி குமாரிக்கு அலாதி ஆர்வம் இருந்து வந்தது. கதைகளைச் சித்திரிப்பவராகத் தன்னைப் பற்றி எண்ணும் இவர், வரலாற்றுக் கதைகளையும் தனது படைப்புகளின் வாயிலாகக் காட்ட முனைந்தார். மிளகாய், ஜாதிக்காய் முதலிய பல வகை நறுமணப் பொருள்கள் பண்டையக் காலத்தில் சிங்கப்பூரின் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகித்தன.
மேலும், இப்பொருள்களை சிங்கப்பூரின் பல்லினத்தவரும் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்புடைய நறுமணப் பொருள்கள் பல்லினச் சமுதாயமான சிங்கப்பூரின் தனித்துவத்தைப் பறைசாற்றும் என்று எண்ணியதால், அவற்றைச் சிலைகளாக வடிவமைத்ததாகக் கூறினார் திருவாட்டி குமாரி.
தற்போது சிங்கப்பூரில் 33 இடங்களில் நிற்கும் புலிச் சிலைகளில் ஒன்றையும் வடிவமைத்துள்ளார் திருவாட்டி குமாரி.
தென்கிழக்காசியாவில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. 'டபிள்யூடபிள்யூஎஃப்' எனும் அனைத்துலக இயற்கை நிதியின் சிங்கப்பூர் பிரிவு அதன் தொடர்பில் விழிப்புணர்வை வளர்க்க எடுக்கும் முயற்சியில் புலிச் சிலைகள் அடங்கும்.
திருவாட்டி குமாரி வடித்த உடலில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் புலி கரையோர பூந்தோட்டங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உட்பட இதுவரை 14 நாடுகளில் திருவாட்டி குமாரியின் ஓவிய, சிற்பப் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இளம் வயதில் பச்சைப் பசேலென்ற திடல்கள், வனப்பகுதிகள் போன்றவற்றின் மத்தியில் வளர்ந்தார் திருவாட்டி குமாரி. இயற்கையே தனது ஓவியக்கண்ணைத் திறந்ததாக உணர்கிறார் திருவாட்டி குமாரி.
"எனது எல்லா படைப்புகளிலும் இயற்கையை மையமாகவோ தொடக்கப்புள்ளியாகவோ கொண்டுள்ளேன். இயற்கையை வைத்தே நம்மையும் நமது சுற்றுச்சூழலையும் பற்றி அறிந்துகொள்ளமுடியும்," என்றார் திருவாட்டி குமாரி.
ஆ. விஷ்ணு வர்தினி