ஈஷூன் அவென்யூ 11 வீவக புளோக் 436 அடித்தளத்தில் புத்தகக் கடையைப் போன்று காட்சியளிக்கிறது ஒரு பகுதி (படம்).
பலர் நன்கொடையாக வழங்கிய புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிறுவர் புத்தகங்கள், மொழிபெயர்க்கப்பட்ட பிரபல ஆங்கில கதைப்புத்தகங்கள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
'டேக் ஒன், ரீட் ஒன், ரிட்டர்ன் ஒன்'... அதாவது 'ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு புத்தகத்தைப் படியுங்கள், ஒரு புத்தகத்தை வழங்குங்கள்' என்று இங்குள்ள சுவரில் எழுதப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக மற்றொன்றை வைக்குமாறு வருகை தருபவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த சமூக நூலகத்திற்கு 'ஈஷூன் சூப்பர்ஹீரோ லைப்ரரி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 24 மணிநேரத்திற்குத் திறந்திருக்கும்.
"இங்கு வந்துபோவதற்குத் தடை இல்லை. சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதே எனது குறிக்கோள்," என்று இந்த சமூக நூலகத்தை உருவாக்கிய மூவரில் ஒருவரான 67 வயது சியா காம் போய் கூறினார். இவருடன் ஈஷூனில் வசிக்கும் 73 வயது வோங் போ கிம், 58 வயது அஷார் முகம்மது சோ ஆகியோர் நூலகத்தை உருவாக்கினர்.
இந்த சமூக நூலகத்தில் உள்ள அனைத்து அறைகலன்களும் நன்கொடையாக வழங்கப்பட்டவை அல்லது சேதமடைந்து சரியாக்கப்பட்டவை.
சில, பழைய அறைகலன்களிலிருந்து மேம்படுத்தப்பட்டவை.
சிங்கப்பூர் முழுவதும் உருவெடுத்துள்ள 20க்கும் அதிகமான சமூக நூலகங்களில் இது ஒன்று. வீவக புளோக்குகளின் அடித்தளங்கள், வீவக வீட்டு வாசல்கள் உள்ளிட்ட பல பொது இடங்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
கிளமெண்டி, கிம் மோ உள்ளிட்ட வட்டாரங்களில் இத்தகைய சமூக நூலகங்கள் இருக்கின்றன. இத்தகைய சிறு சமூக நூலகங்களுக்கான 'லிட்டில் லைப்ரரீஸ் சிங்கப்பூர்' எனும் ஃபேஸ்புக் பக்கமும் சென்ற ஆண்டு உருவாக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 1,300 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.