கொவிட்-19 கிருமிப்பரவலால் நாம் அனைவரும் இயல்பு வாழ்க்கை என்றால் என்ன என்பதை மறந்துவிட்டோம். புதிய இயல்பு நிலை இதுதான் என்று நாம் பழகிக்கொள்ள விரும்பினாலும் மன அமைதி ஏனோ எட்டாக் கனியாகவே சிலருக்கு உள்ளது. நோய்த்தொற்று, பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம், துக்கம், இனவாதப் பிரச்சினைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். புதிதாக ஏற்றுமதி இறக்குமதி தடங்கலும் ரஷ்ய-உக்ரேன் போரும் நம்மை வருத்தத் தொடங்கியுள்ளன.
இவ்வாறு நம் மனதை ஒருநிலைப்படுத்தி தெளிவாகச் செயல்பட, தினமும் நம் நேரத்தை நாம் எவ்வாறு செலவழிக்கிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இம்முடிவுகள் நம் விருப்பங்களுடனும் கொள்கைகளுடனும் ஒத்துப்போகும்போது நமது வாழ்க்கையின் மீது நமக்கு பொறுப்புணர்வு ஏற்படும். இந்நிலையில், மனதைச் சாந்தப்படுத்த சில எளிய வழிகள் இருக்கின்றன.
தியானம் செய்தல்
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மனவுளைச்சலை குறைக்கவல்லதாக தியானம் செய்வது கருதப்படுகிறது.
நம் கவனம் சிதறும்போது நம் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியாக அமைகின்றது தியானம். முன்பு நடந்ததைப் பற்றியோ, வருங்காலத்தில் நடக்க இருப்பதைப் பற்றியோ யோசிக்கும்போது நாம் கவலைப்படுவோம். இதைப் போக்க, சுவாசிப்பதில் நாம் கவனம் செலுத்தி நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும்.
இதை ஆர்வத்துடன் பொறுமையாகச் செய்தால், நமக்கு மீண்டும் தியானத்தில் ஈடுபட வேண்டும் எனத் தோன்றும். மேலும், காலையில் எழுந்ததும் அல்லது சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பிடுவதற்கு முன்பு தியானம் செய்தால் அது நாளடைவில் நமக்குப் பழகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
'டைரி'யில் எழுதுதல்
நாள்குறிப்பு அதாவது 'டைரி'யில் எழுதுவதால் ஒருவரது மனநலன் மேம்படும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
அண்மைய காலமாக 'புல்லட் ஜர்னலிங்' எனப்படும் டைரியில் எழுதுவது பிரபலமடைந்துள்ளது. இது ஒழுங்குபடுத்தும் முறையாகவும் மனதை அமைதிப்படுத்தும் பயிற்சியாகவும் விளங்குகிறது.
நாம் எவ்வாறு நமது நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்துகிறோம் என்று ஆராய்வதற்கு இந்த 'புல்லட் ஜர்னலிங்' உதவியாக உள்ளது. மேலும், நமது செயல்கள் எவ்வாறு நம் மனநிலையை பாதிக்கிறது என்றும் இதன்வழி நாம் அறியலாம்.
அதிகமான தகவல்களைத்
தவிர்த்தல்
மின்னஞ்சல், சமூக ஊடகப் பதிவுகள், சுடச்சுட கிடைக்கும் செய்திகள் என அடுத்தடுத்து அதிக அளவிலான தகவல்கள் நம்மை வந்து அடையும்போது கவலை, கோபம் அல்லது இயலாமை உணர்வுகூட நமக்கு ஏற்படலாம். இதைக் கட்டுப்படுத்த, நம்பகமான ஓரிரு ஊடகங்களிலிருந்து மட்டும் நாம் தேவையான தகவல்களைப் பெற்றுகொண்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அத்தகவல்களைப் படிக்கலாம்.
மேலும், அவசியமில்லாத தொழில்நுட்பச் சாதனங்களை 30 நாள்களுக்குப் பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த 30 நாள்களில் நாவல் படிப்பது, இசை கேட்டு ஓய்வெடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு நாம் நேரத்தை ஒதுக்கலாம்.
வீட்டில் பொருள்களை
அதிகமாகச் சேகரிக்காதிருத்தல்
கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது பலரும் தங்கள் வீடுகளில் இருந்த தேவையில்லாத பொருள்களை அகற்றினார்கள்.
பொதுவாகவே பொருள்கள் நிரம்பி வழியும் இடங்கள், தெளிவாக யோசிப்பதற்குத் தடையாக விளங்குகின்றன. இவை அவ்விடங்களில் இருப்பவர்களையும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதித்து அவர்களின் உணர்ச்சிகளையும் பாதிக்கின்றன.
இருப்பினும் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும்போது, தனியாக இதைச் செய்யத் தேவையில்லை. தங்கள் வீட்டையும் ஒழுங்குபடுத்தும் ஒருவருடன் இப்பணியைச் சேர்ந்து செய்யலாம். இதனால், இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஆலோசகராகவும் இருக்கலாம்.
அன்புக்குரியவர்களுடன்
நேரம் செலவிடுதல்
தனிமையில் இருப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்; அது நம் மனநலனை பாதிக்கும்.
இந்த நேரத்தில் நம் மனநலனை மேம்படுத்தக்கூடியவர்களின் ஆதரவு நமக்குத் தேவை.
ஆகையால், கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது தொடர்பு விட்டுப்போன உறவுகளை நாம் மீண்டும் அழைக்கத் தயங்கக்கூடாது.
அந்த முதல் அழைப்பு சற்று அசௌகரியத்தைத் தந்தாலும் நம் உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் தவறேதும் இல்லை.
செய்தி, படம்: இணையம்

