தற்காப்புக் கலை என்று கூறினால் நம்மில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது டேக்வாண்டோ, கராத்தே போன்ற பயிற்சிகளே. ஆனால், தேசிய கல்விக் கழகத்தில் படிக்கும் 24 வயது பொன்மொழி செம்பியனுக்கு தற்காப்புக் கலை என்றால், அது 'களரி' என்று அழைக்கப்படும் களரிப் பயிற்சிதான்.
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை அறிந்த பிறகு, தற்காப்புக் கலை ஒன்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பொன்மொழிக்கு ஏற்பட்டது. ஆனால், 'முவே தாய்', குத்துச்சண்டை பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள முயன்றபோது, அவருக்கு அப்பயிற்சிகளின் மீது அதிக அளவில் ஈடுபாடு ஏற்படவில்லை.
"முவே தாய், குத்துச்சண்டை இரண்டையும் கற்றுகொள்ள முயன்றேன். ஆனால், அவ்வகுப்புகளுக்கு பிறகு அதிக சோர்வும் வலியும் ஏற்பட்டதால் வேறு தற்காப்புக் கலைகளைக் கற்றுகொள்ள முடிவெடுத்தேன். அப்போது தான் என்னுடைய அண்ணன் களரிப் பயிற்சியை எனக்கு அறிமுகப்படுத்தினார்," என்றார் பொன்மொழி.
இந்தியக் கலாசாரத்தின் மீது இவருக்கு இருந்த ஈடுபாடும் களரிப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள இவரை ஊக்குவித்தது. தனது 21வது வயதில் 'த களரி அகாடமி' என்ற பயிற்சிக்கூடத்தில் களரிப்ப்பயிற்சிக் கலையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் பொன்மொழி.
தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் தோன்றிய களரி, யோகா, சிலம்பம் ஆகிய பயிற்சிகளின் நுணுக்கங்களைக் கொண்ட பழமைவாய்ந்த தற்காப்புக் கலையாக விளங்குகின்றது.
"களரியைக் கற்றுக்கொள்வதால் என் உடல் மேலும் வலுவடைந்திருக்கிறது. ஆரம்பக்காலத்தில் ஏற்பட்ட அளவு உடல் சோர்வு இப்போது ஏற்படுவது இல்லை. மேலும், வகுப்புகளிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் மற்றவர்களுக்கு முன் நின்று களரிப் பயிற்சியை செய்துகாட்டுவதால் எனது தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது," என்றார் பொன்மொழி.
"நான் மூன்று ஆண்டுகளாக களரிப் பயிற்சியைக் கற்றுக்கொண்டு வருகிறேன். இருப்பினும், நான் கற்றுக்கொள்வதற்கு இன்னும் பற்பல விஷயங்கள் இருக்கின்றன. இக்கலையை தொடர்ந்து கற்றுக்கொண்டு அடுத்த தலைமுறையினருக்கும் இதை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை," என்றும் அவர் கூறினார்.
களரி பயிற்சிக் கழகம்
சிங்கப்பூரில் களரிப் பயிற்சியைக் கற்றுக்கொடுக்கும் ஒரே கல்விக்கூடமாக விளங்குகின்றது 'தி களரி அகாடமி'. கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கல்விக்கழகத்தில் இதுவரை 450 மாணவர்கள் களரிப் பயிற்சியைக் கற்றுக்கொண்டுள்ளார்கள். தற்போது அங்கு 200 மாணவர்கள் பயில்கிறார்கள்.
களரியைக் கற்றுக்கொடுக்க பொன்மொழியையும் சேர்த்து இங்கு எட்டு பயிற்றுவிப்பாளர்கள் இருக்கி றார்கள். கொவிட்-19 காலக்கட்டத்திற்கு முன் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள் ஆகியவற்றில் களரிப் பயிற்சிப் பயிலரங்குகளை நடத்தியதுடன் எஸ்பிளனேட், இஸ்தானா, இந்திய மரபுடைமை நிலையம் போன்ற இடங்களில் இவர்கள் நிகழ்ச்சி படைத்துள்ளார்கள்.

