சிங்கப்பூர் சுற்றுப்புறத்தின் நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்யும் விதமாக, சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ஐ அடிப்படையாகக் கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 20-ம் தேதி மெய்ந்நிகர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர் பசுமைத் திட்டத்தின் வழிகாட்டுதல்களை முன்னெடுத்துச் செல்வதற்கான செயல்திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் சௌந்தர ராஜன். பருவநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க, நம் வாழ்க்கைமுறையை சரிசெய்துகொள்வதும் மற்றவர்களிடம் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நீடித்த நிலைத்தன்மைக்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இன்றியமையாதது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
சமூகப் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயல்படும் அதே வேளையில், இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் நோக்கில் அரசு சார்ந்த அமைப்புகளுடனும் ஒருமித்த கருத்துடைய ஏனைய சமூக அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடக்க நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் (வளாகக் கட்டமைப்புப் பிரிவு) சுந்தர் செல்வத்தின் நிபுணத்துவ சிறப்புரை இடம்பெற்றது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் நூறு விழுக்காட்டுப் பசுமைக் கட்டடங்களாக மாற்றி, கட்டட, கட்டுமான ஆணையத்திடமிருந்து சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் பசுமை முத்திரைக்கான விருதுகளைப் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தவர் சுந்தர் செல்வம்.
பொதுவான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றங்கள் மற்றும் சிங்கப்பூர் பசுமைத் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பசுமைக் கட்டடங்களின் மதிப்பைப் பற்றியும் அவை எந்த அளவுக்கு நம் சுற்றுச்சூழல்மீது ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
அறிவார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், கட்டடங்களின் மின்சக்தி சேமிப்பு ஆற்றலை மேம்படுத்துதல், மரபுசாரா சூரிய மின் உற்பத்தியைப் பெருக்குதல், புதிய தொழில் நுட்பத்துடன் குளிரூட்டும் சாதனங்களின் செயல்திறனை உருமாற்றுதல், கட்டடத்தைப் பயன்படுத்துவோருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் விவரித்தார்.
பின்னர் கலந்துரையாடல் மூலம் நாம் ஒவ்வொருவரும் நீடித்த நிலைத்தன்மைக்காக எவ்வாறு பங்களிக்கலாம் என்பதற்கான பயனுள்ள தகவல்களையும் அளித்தார்.
வேறு சில நாடுகளிலிருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த மெய்ந்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டு கேள்வி பதில் அங்கத்தில் பங்கெடுத்தனர்.
வருங்கால சந்ததியினருக்கு நாம் ஒரு பசுமையான சிங்கப்பூரை உறுதிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டுக்குழுத் தலைவர் அன்பழகன் வழிநடத்திச் சென்றார். திரு கருணாநிதி நிபுணத்துவ சிறப்புப் பேச்சாளரை அறிமுகப்படுத்தி வைத்தார். திரு தயாநிதி நன்றியுரை கூறினார். செந்தில் சம்பந்தம் விழாவின் நெறியாளராக ஒருங்கிணைத்தார்.