தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தொல்லைக்கு ஆளாவோர், செய்வதறியாது தவிக்கலாம். இவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்கலாம் என்பது குறித்து மக்கள் செயல் கட்சியின் மகளிர் பிரிவு, கலந்துரையாடல் தொடர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவற்றில் கூறப்பட்ட முக்கியக் குறிப்புகள்:
இணையத் துன்புறுத்தலில்
சிக்கியவருக்கு ஆதரவு...
தனக்கு நேர்ந்த இணையத் துன்புறுத்தல் சம்பவம் குறித்து ஒருவர் வெளிப்படையாகப் பேசத் தயங்கலாம், வெட்கப்படலாம். அவருக்கு நடந்திருப்பது இணையத் துன்புறுத்தல்தான் என்பதற்கான ஆதாரங்களைப் பதிவுசெய்துகொள்வது முக்கியம்.
சட்ட ஆலோசனை, காவல் அதிகாரிகளிடம் புகார், அவமதிக்கும் தகவல் என்று சமூக ஊடக நிர்வாகத்திடம் தெரிவிப்பு போன்ற வழிகளில் ஒருவர் நடவடிக்கை எடுக்கலாம்.
பாதிக்கப்பட்டவரிடம் அதிர்ச்சி, துயரம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்தால், சமூகச் சேவை அமைப்புகளின் உதவியை நாடலாம். பள்ளி ஆலோசகரும் இதற்கு உதவுவார்.
காவலர்களிடம் புகார் அளித்தல்...
அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்குச் செல்ல விரும்பாதோர், இணையத்தின் வழி தங்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்கலாம். முடிந்தவரை அதிகமான விவரங்களைப் பாதிக்கப்பட்டவர் அளிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். புகார் அளிக்கும்போது நம்பிக்கையான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் துணையாகச் செல்லலாம். தொலைபேசிவழி தொடர்புகொண்டு பேச இயலாத நிலையில், 71999 என்ற எண்ணில் குறுந்தகவல் அனுப்பும் வசதியும் உண்டு.
அனுமதியின்றி சமூக ஊடகங்களில் அந்தரங்கப் படங்கள் இருந்தால்...
ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் புகார் அளிக்கும் தெரிவு உள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதாகத் தெரிந்தால் காவலர்களையும் அணுகலாம்.
சட்ட நடவடிக்கை...
வழக்கறிஞர் சேவையை முன்பின் நாடாதவர்களுக்காக சிங்கப்பூரில் பல சட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20 நிமிட ஆலோசனை பெற முடியும்.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

