கடந்த ஈராண்டுகளாக உலகில் பலர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாயினர், பாதிக்கப்பட்ட பலர் மரணமடைந்தனர். கொள்ளைநோய்ப் பரவல் உலகைப் புரட்டிப்போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
அதே வேளையில் உலகெங்கும் பலர் மனநலப் பிரச்சினைகளுக்கும் ஆளாயினர். குறிப்பாக கொவிட்-19 முன்களப் பணியாளர்களும் இளையர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ெகாள்ளைநோய்ப் பரவல் காலத்தில் மனவுளைச்சல், 'என்சயட்டி' எனப்படும் மனப்பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாக ஐக்கிய நாட்டு நிறுவனம் 2020ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்ததாக 'மெடிக்கல்நியூஸ்டுடே' சுகாதார இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அதற்குப் பிறகு பல கொவிட்-19 கிருமிப் பரவல் அலைகளைப் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கிவிட்டன.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் முடக்கநிலை, பாதுகாப்பு தூர இடைவெளி, தனிமையில் இருப்பது உள்ளிட்டவற்றால் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம் இருப்பதாக பல மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
2019ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையில் 12.5 விழுக்காட்டினர் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாயினர்.
2020ஆம் ஆண்டில் இந்த விகிதம் 25 விழுக்காடு அதிகரித்ததாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
எனினும், நெருக்கடியான காலகட்டத்திலும் மனநலனைப் பாதுகாக்க வழிகள் உள்ளன. இதன்படி உணர்வுகளை வெளிப்படுத்துவது நல்லது என்று மனநல ஆலோசகர்கள் சொல்கின்றனர்.
நம்பகமான ஒருவருடன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது நல்லது. மனநல ரீதியாக உதவி நாட தயங்கவேண்டாம் என்றும் நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
இதுபோன்ற விவகாரங்களுக்கு மருத்துவ நிபுணர்களின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டு செயல்படுவது நல்லது.

