'என்எஃப்டி' முறை பயன்படுத்தப்படுவதில் இங்குள்ள கலைக்கூடங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
கலைஞர்களின் படைப்புகளை விற்பதற்கு இம்முறை பயன்படுத்தப்பட்டால், அது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி கலைத்துறைக்கும் ஏற்றம் என்று 'ஆர்ஸ்ட் மீட் ஹார்ட்ஸ்' கலைக்கூடத்தின் இணை நிறுவனர் தர்ம ராஜ் நாகலிங்கம் (படம்) கூறினார்.
'என்எஃப்டி' உரிய முறையில் கலைப்படைப்புகளுடன் சேர்க்கப்படும்போது அந்தப் படைப்புகளின் மதிப்பும் உயரும் என்றார் அவர்.
"ஒரு சிலர் தங்களின் படைப்புகளைச் சந்தையில் அதிக விலையில் விற்றுவிட்டு, அவற்றையே மீண்டும் வாங்கிக்கொள்கின்றனர். பணம் ஏதும் கைமாறவில்லை. ஆனால், அதிக விலைக்குப் படைப்பு விற்கப்பட்டது என்று அறிந்திடும் வாடிக்கையாளர்கள், அதே படைப்பை வாங்க முற்பட்டு பின்னர் லாபத்திற்கு விற்க ஆசைப்படுவர்.
"இத்தகைய மோசடிகள் 'என்எஃப்டி' தளங்களில் நிகழலாம்," என்று எண்ணெய், எரிபொருள் நிறுவனம் ஒன்றில் வட்டார நிர்வாகியாகவும் பணியாற்றும் திரு தர்மராஜ் குறிப்பிட்டார்.
மிகப் பிரபலமான படைப்புகளின் நகல்களைத் தயாரித்து அவற்றின் மூலம் சிலர் லாபம் ஈட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், முறையான புலோக்செய்ன் பதிவுகளைத் தமது கலைக்கூடம் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
"பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களையும் வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் வாங்கும்போது சான்றிதழ் பெற்ற கலைப்படைப்புகளையே தெரிவுசெய்து அவை உண்மையானவை என்பதை உறுதிசெய்யலாம்," என்று அவர் கூறினார்.
தங்களின் படைப்புகளுக்குச் சான்றிதழ் அளிக்க விரும்பும் கலைஞர்கள், அந்தந்தக் கலைக்கூடங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று அவர் கூறினார். படைப்புடன் அது உண்மையானது என்று மெய்ப்பிக்கும் 'என்எஃப்டி' தகுதியையும் சேர்த்து வாங்க முடியும் என்று திரு தர்ம ராஜ் தெரிவித்தார்.
வாங்கிய படைப்பை 'என்எஃப்டி' வழி விற்பவர், அதன் மூலம் லாபம் ஈட்டினால் ஒருபகுதி ஓவியரைச் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார்.
'என்எஃப்டி' தொடர்பில் தரநிலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டால் மக்கள் விழிப்புணர்வு பெறுவர் என்றும் தரக்குறைவான படைப்புகளை வாங்குவதற்குப் பதிலாக கலைஞர்களின் உண்மைப் படைப்புகளை வாங்க முற்படுவர் என்றும் குறிப்பிட்டார்.

