என்எஃப்டி மூலமாக ஓவியர்களின் படைப்புகள் மேலும் அதிகமானோரைச் சென்றடையும். ஓவியக்கலையின் மதிப்பு மேன்மேலும் உயரும் என அண்மையில் தமது படைப்புகளை என்ஃஎப்டி வடிவில் விற்கத் தொடங்கிய முழுநேர ஓவியர் பி ஞானாதிக்கம் தெரிவித்தார்.
அவரது கலைப்படைப்புகளைத் தற்போது 'ஆர்ஸ்ட் மீட் ஹார்ட்ஸ்' கலைக்கூடம் என்எஃப்டி முறைக்கு மாற்றி வருகிறது.
"உதாரணத்திற்கு, 10,000 வெள்ளி மதிப்புள்ள எனது கலைப்படைப்பு ஒன்றை வாங்குவதில் சிரமம் இருக்கலாம். ஆனால் என்எஃப்டி மூலமாக பத்து பேர் தலா ஆயிரம் வெள்ளிக்கு அதே படைப்பை வாங்கி, பின்னர் அதனை அதிக விலைக்கு விற்கலாம்," என்று அவர் விளக்கினார்.
தமது கலைப்படைப்புகளை மேலும் அதிகமானோரிடம் சென்று சேர்ப்பதற்கு 'என்எஃப்டி' ஒரு சிறந்த தளமாக இருப்பதாகக் கூறினார். அனைத்துலக அளவில் தமது படைப்புகளுக்கான தேவையை 'என்எஃப்டி' முறை அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்.
இவரது ஓவியங்களை விரும்பி வாங்கியவர்களில் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதனும் ஒருவர்.
இஸ்தானாவிலும் தேசிய கலைக்கூடத்திலும் இவரது கலைப்படைப்புகள் தற்போது இடம்பெற்றுள்ளன.
வண்ண ஓவியங்களைத் தீட்டுவதுடன் தூக்கி எறியப்பட்ட இயந்திரப் பாகங்களைக்கொண்ட சிற்பங்களையும் இவர் தயாரித்து வருகிறார்.

