மறைந்த புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளின் மதிப்பும் 'என்எஃப்டி' பயன்பாடு மூலம் உயர்கிறது.
இந்தியக் கலை உலகில் புகழ்பெற்ற பழம்பெரும் ஓவியர் ராஜா ரவி வர்மாவின் படைப்புகள், 'என்எஃப்டி' பொருள்களாக உருப்பெற்றன.
அவை கடந்த பிப்ரவரியில் அனைத்துலக வாடிக்கையாளர்கள் பங்கேற்ற ஏலம் ஒன்றில் விற்கப்பட்டன.
விற்பனைக்கு விடப்பட்ட எட்டு படங்களில் ஐந்து, கிட்டத்தட்ட 2,000 வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளன.
'தி கொக்கேட்', 'ரிக்லாய்னிங் நாயர் லேடி' உள்ளிட்ட ஓவியங்கள் உண்மையானவை என்று கூறும் சான்றிதழை ராஜா ரவி வர்மா அறநிறுவனம் வழங்கியது.
இந்த ஏலத்தில் கலந்துகொண்டோரில் பெரும்பாலானோர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று ஏலத்திற்கு ஏற்பாடு செய்த கலைக்கூடம் தெரிவித்தது.
ரவி வர்மா ஓவியங்கள், இந்தியாவுக்கு வெளியில் விற்கப்படுவதற்கு அனுமதி இல்லை.
இதனால், அவற்றை வாங்க இயலாத ஓவிய சேகரிப்பாளர்களுக்கு, இந்த 'என்எஃப்டி' வாய்ப்பளிப்பதாக ஏலத்திற்கு ஏற்பாடு செய்த 'ஆர்டிஸ்டிக்' (Rtistiq) கலைக்கூடத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜோதி கிருஷ்ணன் மேனன், 43, தெரிவித்தார்.

