ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குமுன் தமது பட்டப் படிப்பிற்காக நிதியுதவி பெற்ற திரு செல்வகாந்தன் முத்துராமன், 44, இப்போது திடல்தட விளையாட்டில் தம்மைப்போல உதவி தேவைப்படுவோருக்காக நிதி திரட்டுகிறார்.
‘மணிக்கு ஒரு மைல்’ என்ற கணக்கில் 26 மணி நேரத்தில் 42 கிலோமீட்டர் தொலைவு ஓடி, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்காக (எஸ்ஐஇடி) நிதி திரட்டும் ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக் குழுவினரில் திரு செல்வாவும் ஒருவர். 2017ல் தொடங்கப்பட்ட இக்குழு, ஆண்டுதோறும் வசதி குறைந்த மாணவர்களுக்காக நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. வரும் 30ஆம் தேதி நள்ளிரவு நிறைவடையும் ஓட்டத்தின் மூலம் குறைந்தது $30,000 திரட்டுவது குழுவின் நோக்கம்.
அப்போது தம் தந்தையால் தம்மை முழுமையாக ஆதரிக்க இயலாத நிலையில், ஆஸ்திரேலியாவில் தம்மால் நிம்மதியாகவும் முழுக் கவனத்துடனும் படிக்க முடிந்ததற்கு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் உதவியே காரணம் என்றும் இப்போது அதற்குக் கைம்மாறு செய்ய முடிவது நெகிழ்ச்சி தருகிறது என்றும் திரு செல்வா கூறினார்.
‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவின் நிதித்திரட்டுக்குப் பங்களிப்பதுடன் குழுவில் சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டாடும்படி அதன் நிறுவனரான வழக்கறிஞர் ரமேஷ் செல்வராஜ், 43, கேட்டுக்கொண்டார். “இது எல்லோரையும் அரவணைக்கும் குழு. ஓட்டத்தில் ஈடுபட ஆசைப்படும் அனைவரையும் குடும்பமாக வரவேற்கிறோம்,” என்றார் அவர்.
செய்தி: கி. ஜனார்த்தனன்