ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூரில் ஆயிரம் பறவைகளைச் சேர்த்து ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்றால் அது கெபுன் பாருவில் மட்டும்தான். கெபுன் பாருவில் உள்ள சிங்கப்பூரின் ஆகப்பெரிய, பழமையான பறவைக் காட்சியகமானது பறவைகளுக்கு மட்டுமின்றி அங்கு வளர்ந்து விளையாடிய சமூகத்தினருக்கும் சரணாலயமாகத் திகழ்கிறது.
வானவில்லின் ஏழு வண்ணங்களிலும் பாடும் பறவைகளை உயரமான மரச்சட்டங்களிலோ, ஒதுக்கப்பட்ட நிழலிடங்களிலோ நாம் கெபுன் பாரு பறவைக் காட்சியகத்தில் பார்த்து அவற்றின் இசையைக் கேட்டு இன்புறலாம்.
திறந்தவெளியில் அமைந்துள்ள இந்த மரச்சட்டங்களில் காலை 7 மணியிலிருந்தே பறவைகளை ஏற்றத் தொடங்கிவிடுவர் ஆர்வலர்கள்.
கூண்டுகளில் இருந்தபடி பாடி மகிழும் பறவைகளைப் போலவே, ஒன்றுகூடும் அவற்றின் உரிமையாளர்களும் நிழலில் அமர்ந்து வாழ்க்கைக் கதைகளைப் பேசி மகிழ்கின்றனர்.
இயற்கையில் பறவைகள் திளைக்கவேண்டும் என்பதற்காகப் பறவை ஆர்வலர்கள் தங்களது பறவைகளைக் கொடிக் கம்பங்களில் ஏற்றுவர். மரத்தின் உயரமோ வெயிலோ அதிகம் தேவைப்படாத மற்ற பறவைகளை மாட்டுவதற்கும் தனி இடங்கள் உள்ளன.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்னர் மாதந்தோறும் பறவைப் பாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதற்காக பல மாதங்களுக்கு முன்னரே தங்களது பறவைகள் பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகளை பறவை வளர்ப்பவர்கள் மேற்கொள்வர்.
கெபுன் பாரு பறவை
ஆர்வலர்கள்
ஜாலான் காயூவில் பிறந்து வளர்ந்த திரு உமா காந்தனுக்கு சிறு வயதிலேயே பறவைகளின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. கெபுன் பாரு பறவைக் காட்சியகம் அவருக்கு வாழ்நாள் நட்புகளையும் உறவுகளையும் அளித்தது. தமது வாழ்க்கையை இந்தப் பொழுதுபோக்கு மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார்
"கெபுன் பாருவில் கூடும் பறவை ஆர்வலர்கள் ஒரு குடும்பத்தார் போல வயது, இனம், மொழி அனைத்தையும் கடந்து நட்போடு பழகுவர். படிப்பில் ஈடுபாடின்றித் திரிந்த எனக்கு வாழ்வில் பிடிமானத்தை இந்தப் பறவைகள் ஏற்படுத்தின. பறவை வளர்த்தல் தீய பழக்கங்களை விலக்கி, மனிதர்களுக்கு ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் அளிக்கவல்லது என்பதைப் புரிந்துகொண்டேன்," என்றார் தொழில்முனைவரான 41 வயது திரு உமா காந்தன்.
பறவைகளின்மேல் உள்ள அளவுகடந்த அன்பினால் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைப் பறவைகளுக்காகச் செலவிடுகின்றனர் கெபுன் பாரு பறவை ஆர்வலர்களான திரு உமா காந்தனும், திரு சு. கிஷோர் குமரனும். பறவைகளைப் பராமரிப்பதற்கு உகந்த இல்லம் வாங்குவதிலிருந்து, இப்பொழுதுபோக்கை ஆதரிக்கும் மற்றவர்களுடன் நட்புப் பாராட்டுவது வரை, பறவைகளுக்கே முன்னுரிமை தந்துள்ளனர் இருவரும்.
விமானியாகப் பணியாற்றிய திரு உமா காந்தனும், கப்பல் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய திரு கிஷோரும், தங்களது மனஉளைச்சல் மிகுந்த பணிகளில் தினமும் பறவைகளைப் பராமரிக்கச் சிரமப்பட்டனர். இதனால், பணிகளைக் கைவிட்டு, பறவைகளுக்கென தங்களது வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டனர். வாழ்க்கையில் சுதந்திரம் அளிக்கவல்ல வர்த்தகத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
"அப்பாவின் தாக்கத்தால் எனக்குப் பறவைகள்மீதும், பிராணிகளின்மீதும் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. இப்பொழுதுபோக்கு, முதலீடுகள் அதிகம் தேவைப்படும் ஒன்றாகும். எனது நேரத்தையும் ஆர்வத்தையும் முதலீடுகளாகக்கொண்டு இன்று வளர்ப்புப்பிராணி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளேன்," என்றார் தொழில்முனைவரான 30 வயது திரு கிஷோர் குமரன். வருவாயைக் காட்டிலும் பறவைகளைப் பேணுவதே முக்கியம் என்றார் அவர்.
திரு கிஷோரின் தந்தை, மறைந்த திரு சுந்தரமூர்த்தி, கெபுன் பாரு ஆர்வலர்களில் ஒரு முன்னோடி. பறவைப் பாட்டுப் போட்டிகளில் அவரது குருவிகள் பரிசு வென்று சிங்கப்பூர் பறவை ஆர்வலர்களிடம் அவரைப் பிரபலமாக்கின.
பத்து வயதாக இருந்தபோது திரு கிஷோரை இப்பொழுதுபோக்குக்கு அறிமுகப்படுத்தினார் திரு சுந்தரமூர்த்தி. அவரது தம்பி திரு பார்த்திபனும், ஒரு பறவை ஆர்வலர்.
"நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பெற்றோரின் திட்டுகளையும் மீறி குருவிகள் வாங்கவும், குருவிகளைப் பராமரிக்கவும் சேமிப்பைச் செலவழிப்போம்.
தற்போதைய தலைமுறையினர் கணினியும் கையுமாக உள்ளனர். இயற்கையையும் நேரடி சந்திப்புகளின் முக்கியத்துவத்தையும் அவர்கள் மறந்துவிட்டது வேதனை அளிக்கிறது," என்றார் 57 வயது திரு பார்த்திபன் திண்ணப்பன்.
ஜப்பானிய ஆட்சிக்காலத்துக்குப் பின்னர் சிங்கப்பூரில் பறவைகளைப் பராமரிப்பதும் பாடும் பறவைகளைப் போட்டிக்காக வளர்ப்பதும் பிரபல பொழுதுபோக்கானதாகக் கூறப்படுகிறது.
"அக்காலத்தில் பறவைகளுக்கு மரத்தின்மேல் இருப்பது போன்ற உணர்வை அளிக்க வேண்டி, கயிறுகொண்டு பறவைக் கூண்டுகளை மரத்தின் மேல் ஏற்றினர். பிறகு 1980களில், இவ்விடத்தில் கொடியேற்றக் கம்பங்களைக் கட்டி அவற்றில் தங்களது கூண்டுகளை ஏற்றினர். இது ஒரு சுற்றுலாத் தலம் மட்டுமல்ல, இது சிங்கப்பூரின் மரபுடைமைச் சொத்து," என்றார் கெபுன் பாரு பறவைக் காட்சியகத்தின் துணைத் தலைவராக இருந்த 77 வயது ரோபின் சுவா.
சிங்கப்பூரின் செழிப்புமிகு வரலாற்றில் பறவை வளர்த்தல் அரியதொரு பொக்கிஷமாக விளங்குகிறது. 2018ஆம் ஆண்டில் பாடும் பறவைகளைப் பராமரிக்கும் பழக்கம், தேசிய மரபுடைமை கழகத்தால் பண்பாட்டு மரபுடைமையாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இப்பொழுதுபோக்கின் பொறுப்புகளையும் நவீன வாழ்க்கையின் நேரமின்மையையும் கருதி பல இளையர்கள் இதில் பெரிதளவில் ஆர்வம் காட்டாத நிலை நிலவுகிறது.
ஆர்வம் இருந்தாலும், பெரும்பாலானோர் இப்பொழுதுபோக்கில் நீண்ட நாள் நீடித்து இருப்பதும் அரிதாகிவிட்டதாக ஆர்வலர்கள் பகிர்ந்துகொண்டனர்.