ஆ. விஷ்ணு வர்தினி
'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா', 'தெள்ளு தமிழ்' போன்ற பாரதியார், பாரதிதாசன் தமிழ்க் கவிதைகளை நடனமாகப் படைத்தனர் 'மகூலம்' கலைக்கூடத்தின் மாணவ நடனமணிகள். கடந்த சனிக்கிழமையன்று அரங்கேறிய 'தமிழும் கலையும்' நிகழ்ச்சியில் இந்த ஒப்பற்ற கவிஞர்களின் கவிதைகளுக்கு ஒயிலாட்டம், குறவஞ்சி, பரதநாட்டியம் ஆகிய பாரம்பரிய நடனங்களை அவர்கள் படைத்தனர். 10 முதல் 20 வயதிற்குட்பட்ட மாணவர்கள் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் ஆறு நடனங்களைப் படைத்தனர்.
புகழ்பெற்ற கவிதைகளுக்கும் திரைப்பட பாடல்களுக்கும் நடனம் ஆடியதோடு, கவிதைகளின் பொருளையும் நடனமணிகள் விளக்கினர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது நாட்டுப்புறக் கலைகளைக் கொண்டாடிய திருக்குற்றாலக்குறவஞ்சியும் ஒயிலாட்டமும். திருக்குறளை பரதநாட்டியமாகப் படைக்கவும் நடனமணிகள் முயன்றனர்.
"நாட்டுப்புறக் கலைகளைத் தமிழ் மக்களும் பிற இனத்தவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது எங்களது ஆசை. விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்," என்றார் 'மகூலம்' கலைக்கூடத்தின் நிறுவனர் குமாரி மீனலோசனி ஆனந்தன். கடந்த மூன்று ஆண்டுகாலமாக இக்கலைக்கூடம் இயங்கி வருகின்றது.
"தமிழ்மொழியோடு கலையும் பிறந்தது. தமிழ் இலக்கியங்களில் நடனக்கலைகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன," என்று தமிழ்க் கலைகளின் தொன்மை குறித்துப் பேசினார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு 'மகூலம்' கலைக்கூடத்தில் பயில கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. இந்த நடன நிகழ்ச்சியை https://www.youtube.com/watch?v=8cXWErGCRQs எனும் இணைப்பில் காணலாம்.

