ஹர்ஷிதா பாலாஜி
சிங்கப்பூர் தமிழர் இயக்கம் நடத்திய பட்டிமன்றம், இக்கால இளையர்கள் தமிழ்மொழிமீது கொண்டு உள்ள ஆர்வத்தையும் அவர்களின் பேச்சாற்றலையும் வெளிப்படுத்தும்வண்ணம் அமைந்தது. சென்ற சனிக்கிழமை மாலை மெய்நிகராக நடந்த 'அழகு தமிழ் பழகு' நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக இளையர் பட்டிமன்றம் நேரலையாக இடம்பெற்றது.
'இன்றைய தமிழ்மொழிப் புழக்கத்திற்கு பெரிதும் துணைபுரிவோர் இளையர்களா? முதியோரா?' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் இளையர்கள் அறுவர் பங்கேற்றனர். திரு முஹம்மது பிலால் பட்டிமன்ற நடுவராகச் செயல்பட்டார்.
'மூத்தோரே' என்று வாதாடிய சுதர் செந்தில், தனுஸ்ரீ பாலசுப்ரமணியம், முத்து சுவேதா ஆகியோர், இதுவரை தமிழ் வளர்ச்சிக்கான பாதையை வழிவகுத்தவர்கள் மூத்தோர்தான் என்றும் இக்கால இளையர்கள் வளர்ப்பின் காரணமாகவும் சுற்றுச்சூழல் காரணமாகவும் ஆங்கில மோகத்துடன் தாய்மொழியை மறந்து வாழ்கிறார்கள் என்றும் கூறினர்.
இவர்களின் வாதங்களை மறுத்துப் பேசிய சுந்தர வடிவேலு பிரபவ், தீபிகா பாலமுருகன், சேவாள் ஆகியோர், இக்கால இளையர்கள் தொழில்நுட்பத்தின் உதவியோடு எவ்வாறு தமிழைப் பரப்புகின்றனர் என்றும் பல தமிழ்மொழி நிகழ்ச்சிகளிலும் அமைப்புகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் என்றும் கூறி தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
பின்னர் இருதரப்பினரின் கருத்துகளையும் ஒப்பிட்டு, அவற்றின் மையக்கருத்தைச் சுருக்கமாக பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்த நடுவர், இறுதியில், இன்றைய தமிழ்மொழி புழக்கத்திற்குப் பெரிதும் துணைபுரிவோர் இளையோரே என்று தீர்ப்பு வழங்கினார்.
பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளுக்கான முடிவுகளும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.
பாலர் பள்ளி மாணவர்களுக்கு போட்டியின்போது இரண்டு தமிழ் எழுத்துகள் கொடுக்கப்பட்டன. அவ்விரு எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை மாணவர்கள் கூறவேண்டும். பாலர் பள்ளி ஒன்று, இரண்டு பிரிவுகளில் ஆக அதிகமான சொற்களைக் கூறிய கவியாழினியும் தீபனேஷ் ராம்குமார் பூஜாவும் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
தொடக்கநிலை ஒன்று, இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் படைக்கும் போட்டி நடத்தப்பட்டது. ஆக சிறப்பாகப் படைத்த ஸ்ரீ வினய் ராகவேந்திரனுக்கும் ரித்திக்காவுக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தொடக்கநிலை மூன்று, நான்கு வகுப்பு மாணவர்களுக்கு 'அழகு தமிழ் பழகு' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் தீக்ஷாவுக்கும் எஸ்.ஜெ. அன்ஷிகாவுக்கும் முதல் பரிசு கிடைத்தது.
தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்பு மாணவர்களுக்குக் கதைசொல்லும் போட்டி நடத்தப்பட்டது. போட்டியின்போது காண்பிக்கப்பட்ட படங்களை வைத்து சிறப்பாகக் கதை சொல்லிய கண்ணன் வர்ஷிகாவும் ஷண்முகம் சாய்லக்ஷ்மியும் முதல் பரிசைப் பெற்றார்கள்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பொது அறிவு புதிர்ப் போட்டியில் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழியைப் பற்றிய கேள்விகளுக்கு மிகச் சிறப்பாகப் பதிலளித்த புவனேஷ் சேகரனுக்கும் அவரின் தாயார் திருமதி செல்விக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டது.

