ஹெமராய்ட்ஸ் அல்லது பைல்ஸ் என்று ஆங்கிலத்திலும் மூலம் என்று தமிழிலும் நாம் சொல்லக்கூடிய வார்த்தை, ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல என்பதே பலருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை.
பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும் மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்களின் மென்மையான தசைகளுக்குள் பதிந்துள்ள ரத்த நாளங்களே மூலம் என்று மனித உடற்கூறுயியலில் அழைக்கப்படுகிறது.
இந்த மூலங்களில் நாட்பட்ட உராய்வு, சிராய்ப்பு, அழற்சி ஏற்படுவதால் அவை வீக்கமடைந்து, ரத்தக்கசிவுடன் பெரிதாகும்போதுதான் மென்மையான தசைபோன்ற ஒன்று மலத்துவாரத்தின் உள்ளும் வெளியிலும் உருவாகி பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
மலக்குடலில் இந்த அழுத்தம் அதிகமானால், ரத்தக்கசிவுடன் அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை வந்த பின்புதான் அதை மூலநோய் என்று நாம் அழைக்கிறோம்.
மூலநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்திற்கும் அழற்சிக்கும் நாட்பட்ட மலச்சிக்கல், நாட்பட்ட வயிற்றுப்போக்கு, அதிக எடை தூக்கி வேலை செய்தல், கர்ப்பகாலம், மிகுந்த சிரமத்துடனும் அழுத்தத்துடனும் மலத்தை வெளியேற்றும் பழக்கம் போன்றவை மூலநோய் ஏற்படக் காரணங்களாக உள்ளன.
மூலநோய் எந்த வயதிலும் ஏற்படக்கூடியது என்றாலும், அது பெரும்பாலும் வயதானவர்களையே அதிகம் பாதிக்கிறது. முதுமைப் பருவத்தில் உள்ளவர்களின் ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது, மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது, உடல் பருமன், நார்ச்சத்து குறைவான உணவு, அதிக கொழுப்புள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, உடலில் நீர் பற்றாக்குறை, குடல் சம்பந்தமான இதர நோய்கள், அதிக மனஅழுத்தம், பொதுவாகவே குறைந்த நோய் எதிர்ப்பாற்றலுடன் உடல் மெலிந்து இருத்தல் போன்றவையும் மூலநோய் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன.
மூலநோயின் அறிகுறிகள்
மலப்புழையைச் சுற்றிலும் சிவந்திருத்தல், மலப்புழையில் லேசான மற்றும் அதிகமான வலி, மலம் வெளியேறும்போது வலி மற்றும் ரத்தக்கசிவு, குதத்தைச் சுற்றி வீக்கம், எரிச்சல், அரிப்பு, தொட்டு உணரக்கூடிய அளவில் வலியுடன்கூடிய சதை போன்ற சிறிய கட்டிகள், மலம் வெளியேறியபின் சளிபோன்ற திரவம் வடிதல் ஆகியவை மூலநோய்க்கான அறிகுறிகளாகும்.
மூலநோயையும் மலச்சிக்கலையும் தடுக்கும் நார்ச்சத்து
ஆரோக்கியமாக இருக்கும் நடுத்தர வயதினருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நார்ச்சத்தின் அளவு ஒரு நாளைக்கு 30 கிராம் அல்லது அவரது 1,000 கிலோ கலோரிக்கு 12 கிராம் என்பதாகும்.
இந்திய சைவ உணவு ஒரு நாளைக்கு 225 கிராம் மலத்தையும் மேற்கத்திய உணவுகள் 80 முதல் 170 கிராம் மலத்தையும் உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.
மலத்தின் அளவு 100 கிராமுக்குக் கீழே குறையும்போது, குடலில் கழிவுகள் தேங்கி, மலத்தின் அளவு, அது வெளியேறும் இடைவெளி மற்றும் நேரம் குறைந்து, இறுக்கம் அடைந்து, மிகுந்த சிரமத்துடன் வெளியேற்றப்படுகிறது.
ஆனால், போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும்போது, கழிவுப்பொருள்கள் குடல் வழியாக நகரும் நேரம் குறைக்கப்படுவதுடன், மலத்தின் அளவு அதிகரித்து, உடனுக்குடன் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
மூலநோயைத் தடுக்கும், குணப்படுத்தும் உணவுகள்
ஓட்ஸ், பார்லி, உளுந்து, பிசின் போன்ற திரவப்பொருள் அதிகமாக இருக்கும் உணவுகளில் ஒன்றையாவது தினமும் உண்ண வேண்டும்.
தாவரங்களின் செல்களை இணைக்கும் பசை போன்ற பொருளான பெக்டின், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆப்பிள் ஆகியவற்றில் உள்ளது.
கரையக்கூடிய தன்மையுள்ள நார்ச்சத்து, மலத்தை குழகுழப்புத் தன்மையுடன் மென்மையாக்கி, இறுகிய மலத்தைத் தவிர்த்து, பெருங்குடலிலும் மலக்குடலிலும் மலமும் நச்சும் தேங்காமல் இருக்க உதவி புரிகிறது.
கரையாத நார்ச்சத்தாகிய செல்லுலோஸ் என்னும் பொருள் தவிடு நீக்காத கோதுமை, அரிசித் தவிடு, காய்களின் மென்மையான தோல், தோல் நீக்கப்படாத முழு பருப்பு வகைகள் ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகின்றன.
இவை குடலில் நீரை உறிஞ்சி, மலத்தின் அளவை அதிகப்படுத்தி, நச்சுப்பொருள்களை வடிகட்டி எளிதில் வெளியேற்றுகின்றன. இதனால், குடலின் சுவர்கள் சிராய்ப்பு இல்லாமல், மலப்புழை நரம்புகளும் ரத்தக்குழாய்களும் பாதுகாக்கப்படுகின்றன.
வெண்டைக்காய், தக்காளி, கேரட், முளைக்கட்டிய வெந்தயம், உளுந்து, கொண்டைக்கடலை போன்றவற்றை தினந்தோறும் உணவில் சேர்க்கவேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளை பழங்களை உண்ண வேண்டும். பழச்சாறாக அருந்தாமல், பழமாக அப்படியே சாப்பிடுவது சிறந்தது.
வீட்டில் சமைக்கப்படும் உணவாக இருந்தாலும் காரம், புளிப்பு, உப்பு அதிகம் சேர்ப்பதையும் சூடான உணவுகளை அவசரமாக சாப்பிடுவதையும் தவிர்த்தல் நலம் பயக்கும்.
மூலநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மூலநோய் உள்ளவர்கள் அதிகமான எளிய சர்க்கரையுடன் பளபளப்பூட்டப்பட்ட மாவுச்சத்து நிறைந்த பொருள்களான மைதா, சோளமாவு போன்றவற்றையும் அவற்றில் செய்த உணவுப்பொருள்களையும் முடிந்தவரை தவிர்க்கவேண்டும்.
சோடா மாவு மற்றும் ஈஸ்ட் சேர்த்து செய்யப்பட்ட பேக்கரி பொருள்களான பிரட், பிஸ்கட், கேக் வகைகளையும் பிற இனிப்பு வகைகளையும் தவிர்த்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் காப்பாற்றப்படும்.
அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் வகைகள், வற்றல் மற்றும் இறைச்சி உணவுகளை உண்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வினிகர், சோடியம் பென்சோயேட், அஜினோமோட்டோ, சிட்ரிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட வற்றல் வகைகள், சாஸ் மற்றும் ஊறுகாயை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். இவை அனைத்தும் மூலநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு மீண்டும் சிராய்ப்புகளை ஏற்படுத்தி, மலச்சிக்கலுடன் மூலநோயை ஏற்படுத்திவிடக்கூடும்.

