தமிழ்மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் வாழ்வாதாரம் உண்டு எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி விழாவையொட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத் தின் 115வது பட்டிமன்றம் இம்மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை கியட்ஹாங் சமூகமன்றத்தின் பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் 'இருக்கிறது' என்ற அணியில் கோபிகா, மகிஷா, ரோகித் குமார் ஆகியோரும், 'இல்லை' என்ற அணியில் விஷ்ணு வர்தினி, கவின் நிலா, இனியா ஆகியோரும் வாதிட்டனர்.
இருக்கிறது என்ற அணியின் முதலாம் பேச்சாளர் ரோகித் குமார் பேசுகையில், ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பாடலாசிரியர்கள், திரைக்கதை எழுதுபவர்கள், பேச்சாளர்கள் மற்றும் கணினித்துறையில் மென்பொருள் உருவாக்கு பவர்களாக, பொறியாளர்களாக நிறைய வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றார்.
இரண்டாம் பேச்சாளர் மகிஷா தாய்மொழி கற்பவர்களின் அறிவாற்றல் மற்ற மொழிகளைக் கற்பவர்களின் அறிவாற்றலைவிட 40% அதிகமாக இருக்கிறது என்றும் தமிழ் நம் அடையாளம் என்றும் அதை உணர்ந்தவர்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும் என்றும், என் தாய் பெயர் தெரியாது என் தந்தை பெயர் தெரியாது என்பதைவிட மிகப்பெரிய அவமானம் என் தாய்மொழி தெரியாது என்பதாகும் என்றும் பேசினார்.
3வது பேச்சாளரான அணித் தலைவி கோபிகா பேசும்போது தாய்மொழிக்காக அரசாங்கம் ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருப்பதாகவும், நிறைய வேலை வாய்ப்புகள் அவர்களுக்காக தயாராக இருப்பதாகவும் சொன்னார்.
மேலும் மின்னியல் பொம்மலாட்டம், வலையொலியில் கிராமத்து சமையல் போன்று தமிழ்மொழியில் ஆர்வம் இருப்பவர்கள் வாய்ப்பு களைக் கண்டுபிடித்து வாழ்வாதாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இல்லை என்று பேசிய அணியின் முதல் பேச்சாளர் இனியா செந்தில்குமார் தமிழில் பேசும்போது பெரிய ஔவையார் மாதிரி பேசாதே என்று கிண்டல் செய்வதாகவும், தமிழ் என்ற விதையை ஊன்றி, நற்றமிழை வளர்க்க மாணவர்கள் ஆசைப்பட்டாலும் ஆங்கிலத்தை சிறப்பாகப் படி என்றே பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளை கட்டாயப்படுத்துகின்றனர் என்றும் வாதிட்டார். 2வது பேச்சாளர் கவின்நிலா, வேலை வாய்ப்புகளும் குறைவு, ஊதியமும் குறைவு என்பது எல்லாருக்குமே தெரியும் என்று வாதிட்டார்.
மூன்றாம் பேச்சாளரான அணித்தலைவி விஷ்ணுவர்தினி, தமிழை மாணவர்கள் தம் மதிப்புமிக்க அடையாளமாகப் பார்க்கவில்லை என்றும் பேச்சாளர்கள் மேடையில் பேசும் போது தமிழன்னையே நீதான் என் பேச்சே நீ இல்லாட்டி போனது என் மூச்சே என்று வீரமுழக்கமிட்டு, மேடையைவிட்டு இறங்கியதும் மாறி விடுகிறார்கள் என்றும் பேசினார்.
முகம்மது அலி தமது தீர்ப்பில் "வாழ்வாதாரம் என்பது ஒருவரின் ஈடுபாட்டால் வருவது என்று குறிப்பிட்டார். நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு ஈடுபாட்டுடன் தமிழை நேசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு வாழ்வாதாரம் நிச்சயமாக உள்ளது," என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அடித்தளத் தலைவர்களின் ஆலோசகர், சுவா சூ காங் குழுத் தொகுதி (கியட்ஹாங்) நாடாளுமன்ற உறுப் பினர் திரு சுல்கர்னைன் அப்துல் ரஹீம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவரும் கியட்ஹாங் இந்திய நற்பணிச் செயற்குழுவின் தலைவருமான அருமைச்சந்திரன் வரவேற்புரை, செல்வநாதன் நன்றியுரை ஆற்றினர். (தகவல்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்)

