தமிழ் மொழி விழாவையொட்டி கலாமஞ்சரி தமிழிசை பரப்பு மன்றம் 'கடை ஏழு வள்ளல்கள்' பற்றிய ஆடல் பாடல் நிகழ்ச்சியை வரும் 22ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்தில் மாலை 6.15 மணியிலிருந்து 7.45 மணி வரை படைக்க இருக்கிறது.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
தமிழ் இலக்கியங்களில் ஒரு மனிதன் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து கூறுகளும் எடுத்துரைக்கப்பட்டு இருக்கின்றன.
பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர். இம்மன்னர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை அந்த காலத்தில் ஆண்டவர்கள்.
தங்களின் கொடைவள்ளல் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்தனர். மக்களின் மனம் அறிந்து, அவர்கள் தேவையை உணர்ந்து வாரி வழங்கி நல்லாட்சி புரிந்த மன்னர்கள் ஆவர்.
குளிரில் நடுங்கும் மயிலுக்குப் போர்வை வழங்கினார் பேகன்; முல்லைக்கொடி வாடி நிற்பதைக் கண்டு தன் தேரையே வழங்கினார் பாரி; நீண்ட நாள் வாழ வைக்கக்கூடிய நெல்லிக் கனியை தான் உண்ணாமல் ஔவையாருக்கு கொடுத்து மகிழ்ந்தார் அதியமான்.
இப்படி அவர்கள் ஆற்றிய செயல்கள் பெருந்தன்மையையும் அவர்களுடைய இயற்கை குணத்தையும் போற்றுவதாக அமைந்திருக்கின்றன.
ஆக இந்த நல்ல செயல்களை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சியைப் படைக்க இருப் பதாக திருமதி. சௌந்தரநாயகி வயிரவன் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த கலைமணி வி. சங்கர், இந்நிகழ்ச்சிக்கு பாடல்கள் எழுதி இசையமைத்து இருக்கிறார்.
கலாமஞ்சரியின் நிறுவனர் திருமதி. சௌந்தர நாயகி வயிரவன் மற்றும் கலாமஞ்சரியின் ஆசிரியை திருமதி உமா பிரகாஷ் ஆகிய இருவரும் இதில் பாடல்களைப் பாட இருக்கின்றனர்.
எஸ். தேவராஜன், மிருதங்கம் இசைக்க, திரு வெ. சிவகுமார் இதற்கு வயலின் வாசிக்க இருக்கிறார்.
திருமதி மோகன பிரியா இந்நிகழ்ச்சியை வழி நடத்துகிறார். திருமதி ஸ்வர்ணவர்ஷா குருமூர்த்தி தமது மாணவர்களுடன் நடன நிகழ்ச்சியை படைக்கிறார். நட்சத்திரம் பிரேம்குமார் ஒளிப்பதிவை ஏற்றுஉள்ளார்.
இயல், இசை நாட்டியம் வாயிலாக எளிய தமிழில், அரிய செயல்கள் செய்த மன்னர்களைப் பற்றி எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக இது அமையும் என விழா குழுவினர் கூறியுள்ளனர்.

