ஆ. விஷ்ணு வர்தினி
உள்ளூர் கலைஞர்களுக்கான தளமாகவும், இசை ரசிகர்களுக்கான நிகழ்வாகவும் இடம்பெற்றது, சிங்கப்பூர் இந்திய சிம்ஃபனி இசைக்குழுவின் 'சங்கீத சாரல்'. இசைக் கருவிகள் வாசித்தும் பாடியும் நிகழ்வைப் படைத்த 30 உள்ளூர் இசைமணிகளில், சீன, மலாய் கலைஞர்களும் அடங்குவர். அவர்களுடன், விஷ்ணு பாலாஜி, சுபாஷினி உட்பட பல உள்ளூர்ப் பாடகர்கள் பாடி மக்களை மகிழ்வித்தனர்.
கிரேத்தா ஆயர் மக்கள் அரங்கில் ஏப்ரல் 16ஆம் தேதியன்று நடந்த இந்நிகழ்வுக்கு, ஏறக்குறைய 600 பங்கேற்பாளர்கள் வருகை புரிந்திருந்தனர்.
பிரபல தமிழ், இந்தி, தெலுங்கு ஆங்கிலப் பாடல்களை மக்கள் கேட்டு ரசித்தனர். வயலின், கீபோர்ட், கித்தார், தாளவாத்தியம் என பல்வகை இசைக்கருவிகள் நிகழ்வுக்கு இசை கூட்டின.
"எங்களது ஆறு மாத உழைப்பின் பயன், சங்கீத சாரல். சிங்கப்பூரிலும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் பல திறமைவாய்ந்த கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு இதுபோன்ற மேடைகளை வழங்க தொடர்ந்து முயற்சி செய்வோம்," என்றார் சிங்கப்பூர் இந்திய சிம்ஃபனி இசைக்குழுவின் நடத்துநரும் நிறுவனருமான திரு எஸ். எஸ். முத்து.
பகுதிநேரமாக இக்குழுவில் இணைந்து பயிற்சி செய்யும் பல்லின கலைஞர்கள் பெரும்பாலும் முழுநேரமாகப் பணிபுரிவோர். கிடைக்கும் நேரங்களிலெல்லாம் பயிற்சிசெய்து, கொவிட்-19 சூழலில் ஏற்பட்ட பல தடைகளைக் கடந்து இந்நிகழ்வை ஒரு குழுவாக அரங்கேற்றியுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார் திரு முத்து. மேலும், நிகழ்வைப் படைத்த பல இளைய இசைமணிகளுக்கும் வாய்ப்பளித்து ஆதரவளிக்க முயன்றதாக அவர் கூறினார்.

