ஆ. விஷ்ணு வர்தினி
வீட்டுக்கல்வி பெறும் அண்ணன் தங்கையான மத்தாயஸ், குவெனத் இருவருக்கும் தமிழ்மொழி பிடித்தமான ஒரு பாடம். முதலில் தந்தைவழி மொழியான சீனமொழியைப் பயின்று போராடிய இருவருக்கும், இயல்பாகவே தமிழ்மொழியின்மீது ஆர்வம் இருப்பதை உணர்ந்த தாயார் திருமதி டெப்ரா அவர்களுக்குத் தமிழை முறையாக அறிமுகப்படுத்தினார்.
தமிழில் நூல்கள் படிப்பதும், சிறுவர் பாடல்களைக் கேட்பதும் ஏழு வயது மத்தாயஸுக்கும் நான்கு வயது குவெனத்துக்கும் பொழுதுபோக்குகளாகிவிட்டது. வெகு விரைவில் அவர்கள் மொழி கற்றலில் முன்னேறத் தொடங்கிவிட்டது தனக்கும் கணவருக்கும் மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார் திருமதி டெப்ரா.
வீட்டுக்கல்வி பெற்று வரும் பிள்ளைகளுக்குத் திருமதி டெப்ராவும் அவரது கணவரும் ஆசிரியர்களாகவும் விளங்குகின்றனர். கணவர் கணிதம் கற்றுத்தர, மொழிப்பாடங்களைத் திருமதி டெப்ரா கற்றுத்தருகின்றார்.
"என்னைப் போல் இல்லாமல், எனது பிள்ளைகள் இளமையிலிருந்தே தமிழ்மொழியை, பண்பாட்டைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணினேன். சீனம் பேசும் குடும்பத்தாரும் எங்களது முடிவில் துணை நின்றுள்ளனர்," என்றார் திருமதி டெப்ரா ஷெர்னி குவான்.
இரண்டாம் மொழி என்பது தனிமனித அடையாளத்துக்கு அவசியம் என்று கருதிய கணவர் திரு குவானும் பிள்ளைகளிடத்தில் தமிழை வளர்ப்பதற்கு ஆதரவு தந்ததாக திருமதி டெப்ரா பகிர்ந்துகொண்டார். இருப்பினும், சீன, தமிழ்க் கலாசாரக் கூறுகளை, பண்டிகைகளை எல்லாம் இரு பிள்ளைகளுக்கும் பாரபட்சமின்றி அறிமுகப்படுத்தி வருகின்றனர் இருவரும்.
"வீட்டுக்கல்வி முறை பிள்ளைகளிடத்தில் சமூக திறன்களை வளர்க்காது என்று பலர் குறை கூறியுள்ளனர். ஆனால், இருவரும் எல்லா பண்பாடுகளையும் மொழிகளையும் மதித்து நடக்கும் பக்குவத்தோடு இருக்கின்றனர். அவற்றைப் பற்றி மேலும் அறிவதற்கும் ஆவலாய் உள்ளனர்," என்று திருமதி டெப்ரா குறிப்பிட்டார்.
திருமதி டெப்ராவுக்கு இளமையில் தமிழ்ப் புத்தகங்களே பிடிக்காமல் இருந்தது. கட்டாயப் பாடமாக மட்டுமே தமிழைக் கற்ற அவரது வருத்தத்தைப் போக்கும் வண்ணம், பிள்ளைகள் இருவரும் நூலகத்துக்குச் செல்லும்போது தானாகவே முன்வந்து தமிழ்ப் புத்தகங்களை இரவல் பெறுவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
பிள்ளைகளின் தமிழ்மொழி கற்றல் குறித்து இன்ஸ்டகிராம் (@kwanslearntamil) வாயிலாக பதிவிட்டு வரும் திருமதி டெப்ரா, மற்ற பெற்றோருடன் சமூக ஊடகம் மூலம் இணைவதற்கு இது வாய்ப்பளித்துள்ளதாகக் கூறினார். இதன் மூலம், தமிழ்மொழி கற்றலை மேம்படுத்துவதற்கான புத்தாக்க யோசனைகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொண்டு பயனடைகின்றனர். வீட்டில் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதால், பேச்சு தமிழ் கற்பதற்கு வாய்ப்பில்லாததையும், அது கருதி பேச்சு தமிழில் உரையாட முயற்சி செய்து வருவதாகவும் கூறினார் திருமதி டெப்ரா.
"தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் தமிழ்மொழியைக் கேட்பதைவிட என்னிடத்திலிருந்து தமிழைக் கேட்கும்போது அவர்களும் அதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவர் என்று நம்புகிறேன். அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழ்மொழியைக் கற்று வருகிறேன்," என்றார் திருமதி டெப்ரா.

