கி. ஜனார்த்தனன்
தமிழ்க் கணிமையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 'உத்தமம்' தமிழ் தகவல் தொழில்நுட்ப அனைத்துலகக் கருத்தரங்கு, 'கணியன் 2.0' எழுத்துருவை வெளியிட்டுள்ளது.
தமிழ்க் கணிமையில் முன்னோடியாகத் திகழ்ந்த நா. கோவிந்தசாமி 1990களில் கணியனை அறிமுகம் செய்ததை அடுத்து அதன் இரண்டாவது வடிவமாக இது வெளிவந்துள்ளது.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் கடந்த ஞாயிறன்று காலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் (TLLPC) தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
எழுத்துருக்களை உருவாக்கிய திரு எஸ். மணியம், இதுகுறித்து பார்வையாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்குப் பதிலளித்தார்.
தேசிய கல்வி நிலையத்தில் விரிவுரையாளர் அமரர் நா கோவிந்த சாமி, 1995ல் கணியன் எழுத்துரு மென்பொருளை முதலில் வெளியிட்டார்.
1999ல் அவரது மறைவுக்குப் பிறகு மெல்ல மறைந்துபோன கணியன் எழுத்துருவின் பயன்பாட்டை மீண்டும் தட்டியெழுப்ப புதிய 2.0 எழுத்துருவை உருவாக்கியதாக நியூ வேவ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குநர் எஸ் மணியம் தெரிவித்தார்.
'யூனிகோட்' எனப்படும் கிட்டத்தட்ட 25 புதிய ஒருங்குறி எழுத்துருக்களை kanian.io என்ற இணையத்தளத்தில் ஆர்வமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழில் தட்டச்சு செய்ய பழைய 'டைப்ரைட்டர்', 'தமிழ்99' விசைப்பலகைகளைப் பயன்படுத்துவோரும் ஒலிபெயர்ப்பு முறையைப் பயன்படுத்துவோரும் இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்த முடியும்.
எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்யும் பயனீட்டாளர்கள், இவற்றுடன் 200 'கிலிப்ஆர்ட்' ஓவியங்களையும் பெறுவர்.
இணையச் சேவை இல்லாதோருக்கும் இலவச 'தம்ப் டிரைவ்' கருவியின் மூலம் எழுத்துருக்கள் வழங்கப்படும் என்று எழுத்துருக்கான வெளியீட்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
கணியன் 2.0 சின்னத்தை உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப நிபுணர் நித்யஸ்ரீ, 23, இந்த எழுத்துருவின் மறுமலர்ச்சிக்குப் பங்காற்ற முடிந்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த எழுத்துருக்களைத் தமது பள்ளி பணித்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்போவதாகக் கூறும் உயர்நிலை 1 மாணவி வெனியா, 13, 'கிலிப்ஆர்ட்' ஓவியங்களும் வழங்கப்பெறுவது கூடுதல் சிறப்பு என்றார்.
வீட்டுப்பாடங்களுக்கு இந்த எழுத்துருக்கள் பயனுள்ளதாக இருக்கும் என தான் கருதுவதாக தொடக்கநிலை 5 மாணவன் ஜெர்வேஸ், 11, தெரிவித்தார்.

