விரதம் இருப்பதால் உடலையும் உள்ளத்தையும் சிறந்த நிலைக்குக் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை, பல காலமாகவே வெவ்வேறு கலாசாரங்களில் வேரூன்றிவிட்டது. உதாரணத்திற்கு, ஆன்மிக அறிவொளி பெறுவதற்குப் பழங்காலத்து யோகிகள் விரதம் இருத்தலை ஓர் உத்தியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
சத்து அதிகமுள்ள உணவை உண்டால் உடலில் உள்ள புற்றுநோய் உயிரணுக்களுக்கு அது தீனியாக அமைந்துவிடும் என்றும் அவற்றின் வளர்ச்சியைத் துரிதப்படுத்திவிடும் என்றும் சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.
அதற்கு மாறாக, விரதம் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் வளர வாய்ப்பிருக்காது என்றும் கூறக் கேட்டிருக்கலாம்.
இருப்பினும், புற்றநோய்க்கு எதிராக விரதம் இருப்பதை ஓர் உத்தியாகப் பயன்படுத்துவதன் அபாயத்தை முதலில் வலியுறுத்த வேண்டும் என்று த கேன்சர் சென்டரின் மருத்துவ இயக்குநரும் புற்றுநோயியல் ஆலோசகருமான டாக்டர் வோங் செங் வெங் தெரிவித்து உள்ளார்.
ககெக்ஸியா, எனரெக்ஸியா
உடல் எடை குறைவதே, புற்றுநோயாளிகள் பலரும் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை. அதிலும் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இப்பிரச்சினை மிகத் தீவிரமாக இருக்கும்.
'ககெக்ஸியா' என்ற இந்தப் பிரச்சினை புற்றுநோயாளிகளில் 50 முதல் 80 விழுக்காட்டினருக்கு உண்டு என்று மதிப்பிடப்படுகிறது.
உடல் எடை கணிசமான அளவு குறையும்போது உடல் பலவீனமடைந்து வாழ்க்கைத்தரத்தைப் பாதித்துவிடுகிறது. உடல் எடையில் 40% படிப்படியாகக் கரைந்தபின் மரணம் நேரலாம்.
இவ்வாறு புற்றுநோயாளிகளிடையே 'ககெக்ஸியா' ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
ஒருவர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தால் நச்சுகள் அவரின் உடலில் பரவி, அழிவை நோக்கிய நிலைக்குக் கொண்டு செல்லும். இந்நிலையில் கொழுப்பு மற்றும் தசை திசுக்களை உடல் அழிக்கத் தொடங்கிவிடும்.
இவ்வாறு உடல் தன்னையே அழித்துக்கொள்ளும் நிலையில் புற்றுநோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய 'எனரெக்ஸியா' எனும் பசியற்ற உளநோயால் குறைந்த அளவு கலோரிகள் உடலின் நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.
சில நோயாளிகளுக்கு, அந்தப் புற்றுநோயே செரிமான அமைப்பின் இயல்பான செயல்பாட்டுக்குத் தடங்கலாக இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிட்டாமல் பிரச்சினை மேலும் மோசமடையலாம்.
இந்தக் காரணங்களால் தேவையான சத்து கிடைக்காத நிலையில் இருக்கும் புற்றுநோயாளி ஒருவர், விரதம் இருப்பதாகக் கூறி தானே கலோரிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது கேடு விளைவிக்கும் என்பதே உண்மை. அதனால்தான், புற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதில் போதுமான சத்துணவு உட்கொள்வதன் முக்கியத்துவத்தைப் புற்றுநோயியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
விரதத்தின் ஆற்றல்
இதற்கிடையே, முழுமையான சிகிச்சை முறையில் விரதத்தின் ஆற்றலையும் பயனையும் குறிப்பிடும் ஆதாரங்களையும் இனி காணலாம். விரதத்தால் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழைய உயிரணுக்கள் அழிவதைத் தூண்டிவிட முடிந்ததாக விலங்குகளின் மீது நடத்தப்பட்ட சோதனைகள் காட்டியுள்ளன.
இருப்பினும், உணவுண்டபின் நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட பழைய உயிரணுக்களுக்குப் பதிலாக புதியவை உருவாகின. புற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கு நோய் எதிர்ப்பு அமைப்புமுறை புது வேகம் பெற்றது. இதனால், கட்டி வளர்வதும் மெதுவடைந்ததாக கண்டறியப்பட்டது.
நம்பிக்கை அளிக்கும் ஆய்வுகள்
கடந்த நவம்பரில் இத்தாலிய புற்றுநோய் கழகத்தைச் சேர்ந்த அறிவியல் நிபுணர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் இது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. ஆய்வில் வெவ்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 101 நோயாளிகள் பங்கேற்றனர். மூன்று வாரக் காலகட்டத்தில் இவர்களுக்கு ஐந்து நாள்களில் மட்டும் ஒவ்வொரு நாளுக்கும் சுமார் 300 கலோரிகள் அடங்கிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது இந்த நோயாளிகளின் உடலில் இருந்த கட்டிகளில் புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் இயங்கியதைக் காண முடிந்தது.
'இன்சுலின்' போன்ற வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களின் எண்ணிக்கையையும் வீக்கத்தை ஏற்படுத்தும் சாரத்தையும் விரதம் இருத்தல் குறைப்பதாக விலங்குகள் மீது செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
ஆரம்பக்கட்ட மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,400க்கும் மேற்பட்ட மாதர் தொடர்பான மற்றோர் ஆய்விலும், இரவுவேளை விரதத்தின் பலன் தெரிந்ததாகக் கூறப்பட்டது.
விரதம் இல்லாதோருடன் ஒப்பிடுகையில் 13 மணிநேரம் அல்லது அதற்கு மேல் விரதம் இருந்த பெண்களுக்கு மீண்டும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 30% குறைந்திருந்தது.
'கீமோதெரபி' செல்வதற்குமுன் விரதம் இருந்தால் சாதாரண உயிரணுக்களில் ஏற்படக்கூடிய சிகிச்சையின் பக்கவிளைவுகளைக் குறைத்துக்கொள்ள உதவும் என்றும் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையின் பலனை வலுப்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
போதிய ஆதாரம் இல்லை
இவ்வாறு இடையிடையே விரதம் இருப்பதை வழக்கமான புற்றுநோய் சிகிச்சை உத்திமுறைகளில் ஒருங்கிணைப்பதால் விளைவுகள் மேம்படலாம் என்பதை ஆய்வுகள் காட்டினாலும் இந்த முடிவுகள் யாவும் ஆரம்பக்கட்ட முடிவுகளே.
புற்றுநோயாளிகள் விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கலாம் என்று கூற போதிய ஆதாரங்கள் இல்லை. அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் ஒருநாள் புற்றுநோய் சிகிச்சை உத்தியாக விரதம் இருப்பது ஏற்றுக்கொள்ளப்படலாம்.
ஆனால், அப்போதுகூட புற்றுநோயியல் நிபுணர்களின் கண்காணிப்பில் கவனத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறையாக அது இருக்கும்.
நோயாளிகளே சுயமாக மேற்கொள்ளும் ஒன்றாக இருக்காது. அதனால், புற்றுநோய்க்கு எதிராக விரதம் இருப்பதை ஓர் உத்தியாகப் பயன்படுத்துவதில் அவசரம் வேண்டாம் என்றார் டாக்டர் வோங்.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

