கி. ஜனார்த்தனன்
சங்க இலக்கியங்களில் ஒன்றான 'இனியவை நாற்பது' என்ற நூலின் பொருளை, கலைநயத்துடன் ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை சக்தி நுண்கலைக் கூடத்தின் 'மகிழ்ச்சி' என்ற நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பெற்றனர்.
சங்கப் புலவர் பூதஞ்சேதனார் புனைந்த இனியவை நாற்பது என்ற நீதி நூலில் இருந்து சில வாக்கியங்கள் நடன வடிவிலும் கதை வடிவிலும் விளக்கப்பட்டிருந்தன.
'ஊருங் கலிமா வுரனுடைமை முன்னினிதே', 'ஐ வாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே' போன்ற பழந்தமிழ் வரிகளுக்குச் சிறார்கள் விளக்கம் அளித்திருந்தனர். அந்த வரிகளின் பொருளை உணர்வுப்பூர்வமாக விளக்குவதற்குச் செவ்விசையுடன் கூடிய பரதநாட்டிய அங்கங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் 'காஹுட்' மென்தளத்தின் வாயிலாக புதிர் அங்கம் ஒன்றும் வெவ்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
நடன ஆசிரியர் திருவாட்டி தேவி வீரப்பனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் மொத்தம் 28 மாணவக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகள் ஜனவரியில் தொடங்கின.
"2020ல் எங்கள் பள்ளி மாணவர்களின் அரங்கேற்றத்தில் சிலப்பதிகாரக் கதை ஒருங்கிணைக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து 2020ஆம் ஆண்டு தமிழ் மொழி மாதத்தின்போது புறநானூற்றுப் பாடல்களைப் படைத்தோம்," என்று திருவாட்டி தேவி கூறினார். செய்யுள் வரிகளைக் கூறுவதற்கும் கதை சொல்வதற்கும் பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கச் சவாலாக இருந்ததாக திருவாட்டி தேவி கூறினார்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள சக்தி நுண்கலைக் கூடத்தில் கிட்டத்தட்ட 90% நடவடிக்கைகள் தமிழில் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி தேவி, இனிவரும் தமது பள்ளிகளின் தயாரிப்புகள் தமிழ் இலக்கியத்தை ஒட்டிய கருப்பொருளைச் சார்ந்திருக்கும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நிலை 3 மாணவி ஹர்ஷினி ஹரிதாஸ், இந்த அனுபவம்வழி இனியவை நாற்பது என்ற ஒரு நூல் தமக்கு அறிமுகமானதாகத் தெரிவித்தார்.
"இந்த நீதி நூல் எனக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது," என்று அவர் கூறினார்.

