கி.ஜனார்த்தனன்
புனித ரமலான் மாதத்தில் வசதி குறைந்தோருக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்ய தொண்டூழியர்கள் படையாகத் திரண்டு வசதி குறைந்தோரின் வீடுகளுக்குச் சென்றனர்.
வர்த்தக சொத்துச் சந்தை சேவைகளை வழங்கும் 'ஆரஞ்சுடீ அன்ட் டை' நிறுவனம், சமய நல்லிணக்க ஆர்வலர் அமைப்பான 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்புடன் இணைந்து 'விழாக்காலப் பரிவு 2022' என்ற இந்தத் திட்டத்தின்படி அன்பளிப்புப் பொட்டலங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தது.
வசதி குறைந்த 500 குடும்பங்களிடம் இந்தப் பொட்டலங்களைக் கொண்டு சேர்க்க 'ரோசஸ் ஆஃப் பீஸ்' ஏழு பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றியது.
தாய்லாந்து வாசனை அரிசி, சவூதி பேரீச்சம்பழங்கள், 'மேகி நூடல்', 'குவேக்கர் ஓட்ஸ்' உள்ளிட்ட 13 பொருள்களைக் கொண்டிருந்தது இந்த அன்பளிப்புப் பொட்டலங்கள்.
இவற்றை விநியோகம் செய்யத் தொடங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமையன்று தோ பாயோ வட்டாரத்தில் அமைந்துள்ள 'ஆரஞ்சுடீ அன்ட் டை' கட்டடத்தில் நடந்தேறியது.
நிகழ்ச்சியின்போது சிறப்புரை ஆற்றிய பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், கிருமிப்பரவலால் பொருளியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் அரசாங்கத்துடன் வர்த்தக நிறுவனம் பங்களித்து வருவதைச் சுட்டினார்.
"கொவிட்-19 கிருமிப்பரவலை எதிர்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு மாறி வரும் இந்நிலையில், நம்மில் சிலர் தொடர்ந்து சிரமத்தை எதிர்நோக்குவதை நாம் மறக்கக்கூடாது.
"பல கைகள் சேர்ந்து உதவும் இந்த உத்தியைத் தொடர்ந்து மேம்படுத்தவேண்டும்," என்று இவர் கூறினார்.
"மக்கள், அரசாங்கம், தனியார் துறை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவு தொடர்ந்து வலுவாக இருந்தால் சமுதாயத்தின் மீள்திறன் அதிகமாகும்," என்றும் டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.
பல இன, சமய தொண்டூழியர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்து நிதித்திரட்டு, தளவாடம், விநியோகம் உள்ளிட்டவற்றுக்கு உதவியது மனதை நெகிழ வைத்ததாக 'ரோசஸ் ஆஃப் பீஸ்' நிறுவனரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான முகம்மது இர்ஷாத் தெரிவித்தார்.

