தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தமிழ் முரசுடன் இணைந்து திருக்குறளை மையமாகக் கொண்டு பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி இரு சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் கொடுக்கப்படும் தலைப்பில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும்.
தலைப்பு:
'திருவள்ளுவரும் நானும்'
திருவள்ளுவர் என்றதும் தங்களுக்குத் தோன்றுவது என்ன? திருவள்ளுவருக்கும் தங்களுக்குமான தொடர்பு யாது? திருவள்ளுவர் தங்களுக்கு எப்படித் தெரிகிறார்? அவர் ஒரு வழிகாட்டியாக, நண்பராக, புரட்சியாளராக, பெண்மையைப் போற்றுபவராகத் தெரிகிறாரா? தங்கள் குடும்பத்தினருக்குத் திருவள்ளுவர் தேவையானவராக இருக்கிறாரா? தங்கள் வாழ்வில் திருவள்ளுவரின் பங்கு என்ன? அவர் தனிமனித ஒழுக்கத்தைப் பற்றி, சமுதாயத்தைப் பற்றி பேசுகிறாரா? என்பன குறித்துப் போட்டியாளர்கள் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை 900 முதல் 1,000 சொற்களுக்குள் இருக்க வேண்டும்.
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள்: மே மாதம் 31ஆம் தேதி 2022, இரவு 11.59 மணி.
இப்போட்டியில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவரும் பங்கேற்கலாம்.
தங்களது கட்டுரையைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையத்தள முகவரியான www.tamilmozhi.org மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது புகைப்படம் எடுத்து 8322 3595 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வழியே அனுப்பி வைக்கலாம்.
கட்டுரை எழுத்துத் தமிழில் எழுதப்படுதல் வரவேற்கப்படுகிறது. உரிய மேற்கோள் கருத்துகளுடன் எழுதப்படும்போது, பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் பற்றிய பட்டியலையும் கட்டுரையின் இறுதியில் தருமாறு போட்டியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புத்தகப் பட்டியல் கட்டுரையின் சொல் அளவில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. ஒருவர் ஒரு கட்டுரையை மட்டுமே அனுப்பலாம். நடுவர்களின் முடிவே இறுதியானது.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் செயலவை உறுப்பினர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தமிழ்முரசு நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் ஊழியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் இப்போட்டியில் பங்குபெற இயலாது.
எதிர்கால வெளியீட்டிற்குக் கட்டுரைகளைப் பயன்படுத்தும் உரிமையை ஏற்பாட்டாளர்கள் வைத்திருப்பார்கள். முதல் சுற்றிலிருந்து 50 கட்டுரைகள் மட்டும் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். அதன் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
செய்தி: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிறந்த கட்டுரைகளுக்கு முதல் பரிசாக $1,000, இரண்டாம் பரிசாக $750, மூன்றாம் பரிசாக $500, ஊக்கப்பரிசாக 17 பேருக்கு ஆளுக்கு $100 வழங்கப்படும்.
போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏற்பாட்டாளரை tirukkuralvizha@tamilmozhi.org எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

