மாதங்கி இளங்கோவன்
நோன்புப் பெருநாளை ஒட்டி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது கேலாங் சந்தை. சிங்கப்பூரில் புனித ரமலான் மாதத்தின் கொண்டாட்ட உணர்வை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஒருசேரப் பெறுவதற்கு கேலாங் சந்தையும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
ஒவ்வோர் ஆண்டும் பாரம்பரிய உணவுவகைகளுடன் வித்தியாசமான உணவுவகைகளையும் பானங்களையும் இங்கே வாங்கிச் சுவைத்து மகிழலாம்.
கொவிட்-19 கிருமிப் பரவலை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நோன்புப் பெருநாளுக்கான கேலாங் சந்தை திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையில்தான் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.
ரமலான் மாதத்தின் தொடக்க நாளில் மக்கள் பெருமளவில் வருகையளித்திருந்தாலும் நாளடைவில் நிலைமை மாறிவிட்டதாகக் கூறுகின்றனர் கடைக்காரர்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேலாங் சந்தைக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளித்தாலும் பெரிதாக இலாபம் ஈட்ட முடியவில்லை என்ற கவலையை அவர்கள் பகிர்ந்தனர். ஏறக்குறைய 21,000 வெள்ளி வாடகைக் கட்டணம் செலுத்தும் இவர்கள் சில ஆயிரம் வெள்ளி இலாபம் ஈட்டினால்கூட நிம்மதியாக இருக்கும் என்கிறார்கள்.
இந்தியப் பலகாரங்களை விற்கும் கடைகளும் இங்கு இருக்கின்றன. வெவ்வேறு பாணி உணவுவகைகளின் தனிப்பட்ட அம்சங்களைக் கலந்து புது பாணியில் விற்க முனைந்துள்ளனர் கடைக்காரர்கள்.
பல்லாண்டாகக் கடை நடத்தினாலும் மக்களை ஈர்க்க ஏதாவது புதிது புதிதாக அறிமுகம் செய்வதே சிறந்த உத்தி என்பது கடைக்காரர்களின் கருத்து.
முப்பது ஆண்டுகளுக்கு மேல் கேலாங் சந்தையில் வடைகள் விற்கும் 'த ஒரிஜினல் வடை' கடையின் முன் மற்ற உணவுக் கடைகளைவிட அதிகக் கூட்டத்தைக் காணமுடிந்தது. சுவையான விதவிதமான வடைகளைக் குறைந்த விலைக்கு விற்கிறது 'த ஒரிஜினல் வடை'. வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நிறைய வடைகளை வாங்கிச் செல்வதைக் காணமுடிகிறது.
தமிழ்த் திரைப் பாடல்களையும் இந்தி பாடல்களையும் கேட்டுக்கொண்டே வடைகளையும் மற்ற தின்பண்டங்களையும் பொறித்து மக்களுக்கு விற்பனை செய்வது மிஸ்டர் வடைக் கடையின் சிறப்பம்சம். நீண்ட நேரம் வேலையில் ஈடுபட்டாலும் முகத்தில் புன்னகை மாறாமல் வாடிக்கையாளர்களிடம் நன்கு உரையாடிக்கொண்டே தங்கள் வர்த்தகத்தைச் செய்கின்றனர் இதன் உரிமையாளர்கள்.
'ஃபூடிடியூட்' நிறுவனத்தின் 'பிரெஃபல்ஸ்' இந்த ஆண்டின் புது வரவு. பிராட்டா, 'வேஃப்ஃபல்ஸ்' இரண்டின் கலவை இது. ஐந்து வித்தியாசமான சுவைகளில் விற்பனை ஆகிறது 'பிரெஃபல்ஸ்'. பிராட்டா செய்யப் பயன்படுத்தும் மாவை 'வேஃபல்ஸ்' தயாரிக்கும் கருவியில் ஊற்றினால் சுவையான 'பிரெஃபல்ஸ்' தயார். இந்தப் புதுமையான உணவுவகை வாடிக்கையாளர்களைக் கவரும் என்ற நம்பிக்கையில் உருவாக்கியதாகக் கூறினர் ஃபூடிடியூட்டின் பணியாளர்கள். குலா மெலாக்கா 'பிரெஃபல்ஸ்', டிரஃப்ஃபல் சீஸ் 'பிரெஃபல்ஸ்', சில்லி கிராப்'பிரெஃபல்ஸ்' போன்றவற்றை 9.90 வெள்ளி முதல் 15.90 வெள்ளி வரை இக்கடையில் வாங்கிச் சுவைக்கலாம்.
உள்ளூர்ச் சுவையின் வழி இளையர்களை ஈர்க்கத் திட்டமிட்டதாகக் கூறினார் 'பிரெஃப்ஃபல்ஸ்' கடையின் உரிமையாளர்.
"கேலாங் சந்தையில் ஒவ்வோர் ஆண்டும் எங்கள் நிறுவனம் புதுமையான உணவுவகைகளை அறிமுகம் செய்ய முயற்சி செய்கின்றது. அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் 'பிரெஃபல்ஸ்'. நாவிற்கு இனிப்பும் காரமும் கலந்த சுவையைத் தரும் வகையில் வெவ்வேறு வகைகளில் 'பிரெஃபல்சைத்' தயாரித்து மக்களை எங்கள் கடைக்கு வரவழைக்க விரும்பினோம்," என்றார் அவர்.
கேலாங் சந்தைக்கு ஒவ்வோர் ஆண்டும் தம் குடும்பத்தோடு வருவது வழக்கம் என்றார் 18 வயது சிவகுமார் மோனா. இந்த ஆண்டு உணவுவகைகளின் விலை சற்று அதிகம் என்றாலும், குடும்பத்தாருடன் இங்கு செலவழித்த நேரம் நினைவில் நிற்கக்கூடியது. பிறகும் நினைத்து மகிழ வாய்ப்பு அளிக்கும் இந்தச் சந்தைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் அவர்.
இங்கு பலரையும் கவரும் கடைகளில் ஒன்று துருக்கிய பனிக்கூழ் கடை. இதில் வேலைசெய்யும் 38 வயது ஆண்டனி சேவியர், சிறு பிள்ளைகளுக்கு சிரிப்பூட்டும் வித்தைகளைக் காட்டி அவர்களுக்குப் பனிக்கூழை விற்கிறார். பிள்ளைகளின் முகம் மலர்வதைப் பார்ப்பதில் ஏற்படும் மனநிறைவு இவருக்கு உற்சாகமூட்டுகிறது. நாள் முழுக்க வியர்வை சிந்தி வேலை செய்தாலும் பிள்ளைகளின் மகிழ்ச்சி அதைப் போக்கிவிடும் என்கிறார் இவர்.
படங்கள்: திமத்தி டேவிட்

