வயிற்றில் ஏற்படும் செரிமானக் கோளாறு மருத்துவத் துறையில் டிஸ்பெப்சியா (dyspepsia) என அழைக்கப்படுகிறது.
சரியாகச் சாப்பிடாதவர்களுக்கும் அளவுக்கும் மேல் சாப்பிடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. வயிறு உப்புசமாக உணர்ந்தாலோ, வயிறு வலித்தாலோ இதுவும் செரிமானக் கோளாறாக இருக்கலாம்.
காரமான உணவு சாப்பிட்டவுடன் படுப்பது, மன இறுக்கம், பதற்றம், மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவை செரிமானக் கோளாறு ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன.
இரைப்பைப் புற்றுநோய், இரைப்பை அழற்சி, குடற்புண், பித்தப்பைக் கல், கணைய அழற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
அறிகுறிகள்
குமட்டிக்கொண்டு வருதல், வாய் துர்நாற்றம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வாய் கசத்தல், வயிற்றுப்போக்கு, புளித்த ஏப்பம், பசியின்மை உள்ளிட்டவை இதன் அறிகுறிகள்.
வீட்டு வைத்தியம்
இஞ்சி: உணவுடன் இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆன்டி ஆக்சிடண்ட் இருப்பதால் செரிமானப் பிரச்சினையை குணமாக்கும். இஞ்சியில் வலி, அழற்சியை குணப்படுத்தும் தன்மையும் உள்ளது. ஆனால், குடல்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப் படி சேர்த்துக்கொள்ளலாம்.
எலுமிச்சை: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை சாறு குடித்தால் வயிற்றெரிச்சல், வயிற்று வலி குறையும்.
புதினா: குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுகிறது. சாப்பிட்ட பிறகு புதினா தேநீர் பருகலாம்.
நெல்லிக்காய்: தினமும் ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வர கோளாறு நீங்கும்.
இலவங்கப்பட்டை: ஆன்டி ஆக்சிடண்ட் இருப்பதால் செரிமானக் கோளாற்றை குணப்படுத்த உதவும். இதனை தினமும் 2-3 முறை தேநீராக அருந்தலாம்.
பெருஞ்சீரகம்: இரைப்பை நீர் சுரக்க பெருஞ்சீரகம் உதவும். பெருஞ்சீரகத்தை நீருடன் கலந்து சாப்பிடலாம்.
தேன்: பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் அஜீரணத்தை குணப்படுத்த தேன் உதவுகிறது.

