ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வாள்வீச்சுப் போட்டியின் கடைசி நாளன்று சிங்கப்பூர் அணி மிகச் சிறப்
பாகச் செயல்பட்டு பதக்கங்களை அள்ளியது.
ஆண்களுக்கான குழுப் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிங்கப்பூர் நேற்று தங்கப் பதக்கம் வென்றது. மகளிர் குழுப் பிரிவிலும் பெண்கள் சக்கைப்போடு போட்டனர். முதல்முறையாக வெள்ளி வென்ற வீராங்கனைகள் வரலாற்றில் இடம்பெற்றனர்.
அபாரமாகச் செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறித்த சிங்கப்பூர் குழு, இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆறு தங்கப் பதக்கங்கள், நான்கு வெள்ளிப் பதக்கங்கள், ஐந்து வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் மலேசியக் குழுவை 45-28 எனும் புள்ளிக் கணக்கில் சிங்கப்பூரின் ஜானத்தன் ஆவ் இயோங், ஜொவேல் சியூ, கியரன் லோக், மேத்யூ லிம் ஆகியோர் வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்றனர். மகளிருக்கான இறுதி ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் வியட்னாமிடம் சிங்கப்பூர் குழு 45-39 எனும் புள்ளிக் கணக்கில் மிகக் கடுமையாகப் போராடித் தோற்றது.