இந்தியாவின் கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், லைலா எனும் சிற்றூரைச் சேர்ந்த ஒரு கோழி, முந்திரிக்கொட்டை வடிவில் முட்டையிட்டு, ஊரையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
முந்திரி வடிவிலான முட்டைகளை முதலில் கண்டதும் அந்தக் கோழிக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது என்று தாம் நினைத்ததாகக் கூறினார் அதன் உரிமையாளர் பிரசாந்த்.
அண்மையில்தான் இந்தக் கோழி இப்படி முந்திரி வடிவில் முட்டையிடத் தொடங்கியதாகவும் அதன்பின் இக்கோழியிட்ட பத்து முட்டைகளும் இதே வடிவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்நாள் இத்தகைய முட்டையைக் கண்டதும் அவரின் குடும்பத்தினர் வியந்துபோயினர். இருப்பினும், எதுவும் செய்யாது இன்னும் சில நாள்கள் காத்திருக்கலாம் என்று அவர்கள் முடிவுசெய்தனர்.
ஆனால், இக்கோழி இப்படி முந்திரிக்கொட்டை வடிவில் முட்டையிடுவது தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தக் கறுப்புநிறக் கோழியைக் காணவும் அது இட்ட முட்டைகளைக் காணவும் ஊரார் திரு பிரசாந்தின் வீட்டிற்குப் படையெடுத்தபடி உள்ளனராம்.
"தொடர்ந்து மூன்று நாள்களாக முந்திரி வடிவில் முட்டையிட்டதைக் கண்டதும், கோழியைக் கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்றோம். கோழியின் கருப்பையில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம் அல்லது அதன் இனப்பெருக்க உறுப்பில் புழுக்கள் இருக்கலாம்," என்றார் திரு பிரசாந்த்.
எதனால் இந்தப் பிரச்சினை என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது தெரிந்தபின், தேவைப்பட்டால் கோழிக்குச் சிகிச்சை அளிப்பது என்று திரு பிரசாந்தின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதுபோல, கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்தி பாபு எனும் மளிகைக் கடைக்காரர் வளர்த்துவரும் கோழி மாங்காய் வடிவில் முட்டையிட்டது நினைவுகூரத்தக்கது.