மோனலிசா
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் 75ஆம் ஆண்டு நிறைவு, செந்தோசா மேம்பாட்டு நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு, மெர்லயன் சிலையின் 50ஆம் ஆண்டு நிறைவு, கரையோரப் பூங்காவின் 10ஆம் ஆண்டு நிறைவு ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து இவ்வாண்டின் சிங்கப்பூர் மரபுடைமை விழா கொண்டாடப்படுகிறது.
விழாவின் சிறப்பம்சங்களாக ஆர்ச்சர்ட் சாலையிலும் சேஞ் அலீயிலும் இருந்த அப்பாஸ் பல்பொருள் அங்காடி, தேனீப் பண்ணையான பீ அமேஸ்ட் கார்டனின் நிறுவனர்கள் தங்களுடைய இயற்கை மரபுடைமை சார்ந்த பயணத்தையும் அதில் தங்களுக்கு ஊக்கமளித்த விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் காணொளி இடம்பெறுகிறது.
பயணக் கதைகளில் சிங்கப்பூரின் சித்திரிப்பையும் அதில் சிங்கப்பூரர்களின் பார்வையையும் சுற்றுலாப் பயணிகளின் கருத்துகளையும் பிரதிபலிக்கும் திரைப்படம் ஒன்றும் இடம்பெறுகிறது.
விரைவு ரயில்களில் பயணம் செய்தபடியே வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் ரயில்களின் நுழைவாயில்களில் ஒட்டப்பட்டுள்ள சிங்கப்பூர் பற்றிய அரிய தகவல்கள் நிறைந்த 'ரைட் அண்ட் டிஸ்கவர்' எனும் முயற்சியும் சிங்கப்பூரர்களின் தனித்துவமான பொழுதுபோக்குகளைச் சித்திரிக்கும் வண்ணம் ஒரு காணொளியும் இடம்பெறுகின்றன.
அந்தக் காணொளியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தீவிர ரசிகர் ஒருவர், 40 ஆண்டுகாலமாக சேகரித்த நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்ஐஏயின் நினைவுப் பொருள்களின் தொகுப்பும் உள்ளது.
மே மாதம் 2ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை நடைபெறும் இவ்விழாவில் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் உட்பட 80க்கும் மேற்பட்ட சமூக பங்காளிகளும் கலந்துகொள்கின்றன.
இவ்வாண்டின் கருப்பொருளான 'சிங்கப்பூரின் பயண வரலாறும் இயற்கை மரபுடைமையும்' என்பதை பறைசாற்றும் 120க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் வாழ்வியல் முறை சார்ந்த அனுபவங்களும் தாவரங்கள், விலங்கினங்களின் அரிய அம்சங்களை வெளிக்கொணரும் கலாசார பாரம் பரியத் தடங்கள், பயிலரங்குகள், காணொளி ஆவணப்படங்கள், சுற்றுலாக்கள், கண்காட்சிகள் போன்றவையும் இடம்பெறுகின்றன.
நான்கு வார இறுதி நாள்களில் நடந்து வரும் இவ்விழாவில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நேரடியாகவும் சில நிகழ்ச்சிகள் இணையம் வழியும் நடைபெறுகின்றன.
விழா பற்றிக் குறிப்பிட்ட விழாவின் இயக்குநர் டேவிட் சியூ, "கடந்த இரு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பெரும்பாலான நிகழ்வுகளை நேரடியாக நடத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
"நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள், பங்குதாரர்கள், உறுப்பினர்களின் உதவியுடன் சிங்கப்பூரின் வரலாறு மற்றும் மரபுடைமை அதிகம் அறியப்படாத அம்சங்களை வெளிக்கொணர்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்," என்று கூறினார்.
கடந்த வாரம் பூன் லே டிரைவ், மவுண்ட் ஃபேபர் மலை ஆகிய இயற்கையோடு இயைந்த சுற்றுலாக்கள், ரங்கோலிப் போட்டி, ஆர்ட் ஆஃப் ரன்டாய் என்னும் பல்துறை கலை அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகள் நடந்தன.
விழாவின் கடைசி வாரமான இந்த வாரத்தில் வரும் 29ஆம் தேதி வரை சிங்கப்பூரில் மரங்களின் பெயர்களில் உள்ள தெருக்களைப் பற்றிய மெய்நிகர் சுற்றுலா, தெலுக் ஆயர் வரலாற்று வட்டாரத்தில் நடைபெறும் நடைப்பயணம், சாங்கி விமான நிலைய ஊழியர்கள் பற்றியும் சிங்கப்பூர் பாரம்பரியத்தை பற்றியும் விளக்கும் ஃபேஸ்புக் காணொளிகள், கெபுன் ராசா சாயாங் பூன் லே பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளின் தோட்டப் பராமரிப்பு போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.