தரையில் அமர்ந்து சாப்பிட்டபிறகு, யாருடைய உதவியும் இன்றி, தரையில் கையை ஊன்றாமல் எழுபவர்களுக்கு ஆயுள் மேம்படுவதாக ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
முந்தைய தலைமுறையினர் ஆரோக்கியமாய் வாழ அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுடன் சாப்பிட்ட முறையும் முக்கிய காரணமாக இருந்தது.
நமது மூதாதையர்களிடம் தரையில் சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதே பழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அது மாறிவிட்டது.
பெரும்பாலான வீடுகளில் சாப்பாட்டு மேசைகளில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பல உணவகங்களில் மட்டுமின்றி திருமணங்களிலும் பஃபே விருந்து என்று நின்றுகொண்டு சாப்பிடும் பழக்கம் பரவி வருகிறது.
இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது 'சுகாசனம்' எனப்படும் யோகப் பயிற்சியாகும். இந்த நிலை செரிமானத்திற்கு உதவுகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்காக நாம் முன்னால் தலையைக் குனிவோம். உணவு எடுத்தபிறகு பின்னால் வருவோம். இந்தச் செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு நல்ல செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.
தரையில் அமரும்போது 'வேகஸ்' எனும் நரம்பு (மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புவதால் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.
இப்படி தரையில் அமர்ந்து சாப்பிடு வது மற்றோர் ஆசனமான பத்மாசனத்துடனும் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைந்து உடம்பு வலிகளைக் குறைக்க உதவுகிறது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது.
இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுவதால் குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது என்கின்றனர் மருத்து வர்கள்.