யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கமும் முனீஸ்வரன் சமூக சேவை மையமும் உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் திருமண மண்டபத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது.
முனீஸ்வரன் சேவை மையத்தை முனீஸ்வரன் ஆலயம் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியது. ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தில் வசிக்கும் இந்திய குடியிருப்பாளர்களுக்கு உதவுவதே இந்த மையத்தின் இலக்கு.
இந்த மையம் தற்போது மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவது, மக்களுக்கு இலவச மருத்துவ, சட்ட ஆலோசனைகள் வழங்குவது, சிறையிலுள்ள இந்தியர்களுக்கு ஆலோசனை உரைகள் நடத்துவது எனப் பல உதவிகளைப் புரிந்து வருகிறது.
தமது குறிக்கோளை எட்டவும் தகுதியான இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்ற வேட்கையை கொண்டுள்ளதாலும் இம்மையம் சிண்டாவுடன் இணைந்து செயல்பட முனைந்ததாக முனீஸ்வரன் சமூக சேவை மையத்தின் தலைவரான, திரு மா. பா. கணேசன், 69, தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இரு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படவும் இரு அமைப்புகளுக்கு இடையே உள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரிதும் உதவுமென அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
இதன் மூலம், உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்க முடியுமென நம்புவதாக அவர் தெரிவித்தார்.
"ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களுடன் இணைந்து சிண்டா பல ஆண்டு
களாகப் பணிபுரிந்து வந்தாலும், ஓர் ஆலயத்தின் சமூக சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இதுவே முதல்முறை. இதற்கு காரணம், இதன்மூலம் உதவி தேவைப்படும் இந்தியர்
களுக்கு மேலும் விரிவான மற்றும் ஆழமான உதவிகளை வழங்க முடியும் என்பதே ஆகும்." என
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு
ராஜேந்திரன் கூறினார்.
இவ்வாறு இணைந்து பணி புரிவதால் இந்திய சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளின் மூல காரணங் களைக் கண்டறிந்து அவற்றை தீர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவ்வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய குடியிருப்பாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் உதவிகளைவிட மேலும் எத்தகைய உதவிகளையும் சேவைகளையும் வழங்க முடியுமென இரு அமைப்புகளும் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கலந்துகொண்டார். இந்த ஒப்பந்தம் அரசின் 'பல உதவும் கரங்கள்' (Many Helping Hands) திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமென்றும் இது போல பல அமைப்புகள்
ஒன்றிணைந்து சேவை
யாற்றுவது வரவேற்கத்தக்கது என்றும் திரு சுவா கூறினார்.
இவ்வாறு இரு அமைப்புகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது பல நன்மைகளைத் தரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இரு அமைப்புகளும் இட வசதிகளையும் பொருள் வசதிகளையும் பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் பெரிதும் உதவுமென அவர் தெரிவித்தார்.
இதனால், இந்தியச் சமூகத்துக்குத் தேவையான உதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என திரு சுவா தெரிவித்தார்.

