ஹர்ஷிதா பாலாஜி
இந்தியப் பண்பாட்டில், ஒரு பதின்ம வயதுப் பெண்ணுக்கு முதல்முறையாக மாதவிடாய் ஏற்படுவது பல குடும்பங்களில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, தமிழர் பண்பாட்டில் அதைச் 'சடங்கு' அல்லது 'மஞ்சள் நீராட்டு விழா' என்று அழைப்பது உண்டு. இதுவே 'ஸ்ட்ராபெர்ரி கேர்ல்ஸ்' என்ற நாடகத்தின் மையப் பொருளாகும்.
நாடகத்தில் மொத்தம் மூன்று கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றனர். 13 வயது விமிஷா, தாயார் சோனியா, பாட்டி கல்யாணி. விமிஷாவுக்கு முதல்முறையாக மாதவிடாய் ஏற்பட்டபோது, அதை எவ்வாறு அவர்கள் மூவரும் சமாளித்தார்கள் என்பதைச் சுற்றி கதை நகர்கிறது.
அதே நேரத்தில், திருமணம், மணவிலக்கு ஆகிய விவகாரங்கள் குறித்து இந்த நாடகத்தில் பேசப்படுகிறது.
"முதன்முதலில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது அது 'ஸ்ட்ராபெர்ரி' தயிர் என்று நினைத்தேன். அதனாலேயே நாடகத்துக்கு 'ஸ்ட்ராபெர்ரி கேர்ல்ஸ்' என்கிற பெயரை வைத்தேன்.
அத்துடன், பெரும்பாலான வீடுகளில் வெளிப்படையாக மாதவிடாய் என்று சொல்ல மாட்டார்கள், வேறு ஏதாவது வார்த்தையை வைத்தே அதை மறைமுகமாக குறிப்பிடுவார்கள்.
"ஆகையால், நாடகத்தின் முதல் பாதி முழுவதும் மாதவிடாயைக் குறிக்க 'ஸ்ட்ராபெரி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது," என்றார் நாடக இயக்குநர் அஷ்வாணி அஷ்வத், 31.
மாதவிடாய் தொடர்பான பழக்கவழக்கங்களும் மனப்பான்மையும் மூன்று தலைமுறையினரைப் பிரதிநிதிக்கும் மூன்று கதாபாத்திரங்கள் மூலம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாதவிடாய் தொடர்பான புராணக்கதைகளைச் சித்திரிக்க நாடகத்தில் வசனங்களோடு நடனமும் இசையும் இடம்பெறுகின்றன.
விமிஷாவின் பாட்டி கல்யாணியாக நடித்துள்ள திருவாட்டி பத்மா சாகரம் மிகவும் யதார்த்தமான நடிப்பை இந்த நாடகத்தில் வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, பாட்டி கல்யாணிக்கு மாதவிடாய் ஏற்பட்ட காலத்தில் கேள்வி எதுவும் கேட்காமல் மூடநம்பிக்கையைக் கொண்டிருந்தார்.
அதுபற்றி தம் பேத்தி கேட்கும்போது அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறுவதும் தம் மகளின் திருமண வாழ்வின் சங்கடமான நிலைமையைப் புரிந்துகொண்டு ஒரு தாயாக அவர் வருத்தப்படுவதும் பாராட்டுக்குரியது.
'சடங்கு' என்னும் விழாவை மூடநம்பிக்கை என்று சொல்லி கொச்சைப்படுத்தாமல் அனைத்து கோணங்களிலிருந்தும் அலசி ஆராய்ந்ததே நாடகத்தின் மாபெரும் வெற்றி.
இருப்பினும், நாடகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றதால் அதில் கூறப்படும் கருத்துகள் பார்வையாளர்களை, குறிப்பாக மற்ற இனத்தவரை எவ்வளவு தூரம் சென்றுசேரும் என்ற கேள்வி எழுகிறது.
எனினும், இக்கருத்தை மற்ற இனத்தவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற இயக்குநரின் நோக்கம் பாராட்டுக்குரியது.
"தொடர்ந்து இதுபோன்ற படைப்புகளை உருவாக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். மாதவிடாயின்போது ஒரு பெண் 'சுத்தமில்லை' என்று சொல்வதை நிறுத்தவேண்டும், பலரும் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும்," என்றும் அஷ்வாணி அஷ்வத் கூறினார்.

