குதிரைவாலி மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிகமிகச் சிறியது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்ற மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலியாகும். இது கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும். குதிரைவாலியை ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்று அழைக்கின்றனர்.
குதிரைவாலி அரிசி மருத்துவ குணங்கள்
குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
செரிமான பிரச்சினைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது.
இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. அதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும்.
கண் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும் 'பீட்டா கேரோட்டின்' இதில் அதிகமாக உள்ளது.
இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.
செரிமானத்தின்போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
உடலில் கபம் அதிகமாகி, அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப் படுபவர்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
உடல் உறுப்புகளைத் தூய்மையாக்கும். மேலும் நல்ல ஆண்டி ஆக்சிடன்டாகவும் செயல்படுகிறது.
கோடை வெப்பத்தைத் தணிக்க சிறந்த மதிய உணவு குதிரைவாலி தயிர் சாதம்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி - 500 கிராம், பால் - ஒரு கோப்பை, தயிர் - அரை கோப்பை, உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 1, பெருங்காயத்தூள் சிறிதளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு - அரைத்தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, மாதுளை, இஞ்சி - சிறிதளவு.
செய்முறை:
குதிரைவாலி அரிசியை இரண்டு மூன்று முறை தண்ணீர் விட்டு சுத்தம் செய்துகொள்ளவேண்டும். ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
பின் சாதம் குளிர்ந்த பிறகு, அதனுடன் பால், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து பொரித்து எடுத்து அவற்றை குதிரைவாலி சாதத்துடன் கலக்க வேண்டும். இறுதியில் கொத்தமல்லி, மாதுளை சேர்த்துப் பரிமாறவும். மிகவும் ருசியாக இருக்கும்.

