யுகேஷ் கண்ணன்
சிங்கை தமிழ் மேடை நாடகத் துறையில் பல ஆண்டுகளாக நடித்து வரும் முன்னோடித் தலைமுறையினரிடமிருந்து நடிப்புக் கலையைப் பற்றியும் நாடக உத்திகளைப் பற்றியும் அறிந்திடப் பட்டறை ஒன்றுக்கு அவான்ட் நாடகக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
இப்பட்டறை ஸ்டாம்ஃபர்ட் கலைகள் நிலையத்தில் ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இப்பட்டறையில் பங்கேற்கலாம்.
இப்பட்டறையில் பங்கேற்க விரும்புபவர் $30 கட்டணம் செலுத்தவேண்டும்.
பட்டறையின் இடையே மத்திய உணவு வழங்கப்படுவதுடன் பட்டறையின் முடிவில், பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படும்.
இப்பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு ஜூன் 24, 25ஆம் தேதிகளில் அவான்ட் நாடகக்குழு மேடையேற்றவுள்ள '4ஜி' நகைச்சுவை நாடகத்துக்கான நுழைவுச்சீட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து பங்கேற்கும் நோக்குடன் ஜூன் மாத விடுமுறையின்போது இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடகக்குழுவின் தலைவர் திரு க. செல்வநாதன், 54, தெரிவித்தார். முன்னோடித் தலைமுறை நடிகர்கள் எவ்வாறு நடிக்கிறார்கள், நாடகத்திற்கு எவ்வாறு தயாராகிறார்கள், மேடையில் எவ்வாறு நடிக்க வேண்டும் போன்றவற்றைப் பட்டறைக்கு வருபவர்கள் கற்பர் என அவர் கூறினார்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நாடகத்தில் நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று சிங்கப்பூரைத் தாக்கிய தொடக்க காலகட்டத்தில், முதியோர் இல்லம் ஒன்றில் நிகழும் கலவரங்களை மையப்படுத்திய நகைச்சுவை நாடகமாக இது அமையும்.
வசதிகுறைந்த முதியோரும் இந்நாடகத்தைக் கண்டு களிக்க வேண்டும் என்ற நோக்குடன் அவான்ட் நாடகக்குழு 'ஸ்பான்சர் அன் ஆடியன்ஸ்' என்ற நன்கொடைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் வழி சன்லவ் இல்லம், ஸ்ரீ நாராயண மிஷன் போன்ற முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோர் பயனடையவுள்ளனர்.
இப்பட்டறையில் பங்கேற்கவும் நாடகத்துக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெறவும் அவான்ட் நாடகக் குழுவின் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டகிராம் பக்கத்தை நாடலாம்.

