இந்திய சமையலில் நாம் அதிகம் பயன்படுத்தும் பெருங்காயம், மணமும் சுவையும் மட்டும் தரவில்லை. உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடியது. அவற்றைச் சற்று ஆழ்ந்து பார்க்கலாம்.
முதலில் பெருங்காயம் செரிமானத்துக்கு உதவுகிறது. பெருங்காயம் இயற்கையிலேயே காரமானது. புலால் போன்றவற்றை உண்ணுவதால் ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தை அது தடுக்கிறது.
உப்பிசம், வாய்வு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் இயக்கங்களைக் குறைக்க பழங்காலத்திலிருந்தே பெருங்காயம் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பெருங்காயம் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளைத் தணிக்கிறது. பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்புத் தன்மை உள்ளது.
அதனால் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகள், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவற்றிலிருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெருங்காயத்தில் உள்ள கூமரின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, அதன் அடர்த்தியைக் குறைக்கிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, வயிற்றுவலியைக் குறைக்க உதவுகிறது. அத்துடன் உயர் ரத்த அழுத்தம் குறைவதற்கும் பெருங்காயத்தில் உள்ள கூமரின் உதவுகிறது.
கணையத்தில் இன்சுலின் சுரக்க பெருங்காயம் அதன் அணுக்களைத் தூண்டுவதால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதிலும் அது கைகொடுக்கிறது.
ஆஸ்துமா, நரம்புப் பிரச்சினை, மலச்சிக்கல் போன்றவற்றுக்கும் பெருங்காயம் மிகவும் நல்லது.
பெருங்காயம் முகப்பருவைக் குறைக்க உதவும். அதன் அழற்சிக்கு எதிரான தன்மை முகப்பருக்கள் உண்டாவதைக் குறைக்கின்றன.

