தமிழர் சீர்திருத்த சங்கமாக 1922 முதல் சிங்கப்பூரில் பல்வேறு சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு, 2003 முதல் சிங்கைத் தமிழ்ச் சங்கமாக தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது. இம்மாதம் 23ஆம் தேதி தனது 100வது ஆண்டை எட்டுகிறது சிங்கைத் தமிழ்ச் சங்கம்.
2019ல் மூன்று சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுடன் சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்ற திருமதி விஜி ஜெகதீஷ், குறுகிய காலத்திலேயே, தொழில்நுட்பம், மின்னியல் தளங்களில் தமிழைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை இளையர்களிடம் ஒப்படைத்தார்.
'மாத்தி யோசி', 'ஒரு குட்டி கதை சொல்லட்டா', 'ஒரு கேளிச்சித்திர கதை சொல்லட்டா' போன்ற புத்தாக்க மின்னிலக்கப் படைப்புகளின் மூலம் இளையர்கள் சங்கத்தின்பால் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர்.
குறுகிய காலத்தில் 60க்கு மேற்பட்டவர்கள் அடுத்த 100 ஆண்டு களுக்கான வரலாற்றை எழுத துணிவுடன், புத்தாக்க சிந்தனையுடனும் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்து வலு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
சங்கத்தின் தலைமை மற்றும் செயலவைக் குழுவில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே சங்கம் தொடர்ந்து புத்தாக்க சிந்தனையுடனும், புத்துணர்ச்சியுடனும் இயங்க முடியும் என்ற நோக்கத்தோடு, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்திகேயன் தலைமை பொறுப்பேற்று இளையர்களை வழி நடத்தவிருக்கிறார்.
அவருக்கு உறுதுணையாக அனுபவசாலிகளையும் இளைஞர்களையும் சரிசமமாக கொண்ட ஆற்றல்மிகு செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் புதிய செயலவை உறுப்பினர்கள்:
(முன் வரிசை இடமிருந்து இரண்டாவதிலிருந்து) தலைவர் கிருஷ்ணமூர்த்தி கார்த்திகேயன், துணைத் தலைவர் குமரன் பரதன், ஆலோசகர் விஜி ஜெகதீஷ் மற்றும் இதர உறுப்பினர்கள். படம்: சிங்கைத் தமிழ் சங்கம்

