கீல்வாத பாதிப்புடையவர்கள் நடைப்பயிற்சி செய்வதன்மூலம் முழங்கால் வலியைத் தடுக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.
அமெரிக்காவில் மட்டும் 32 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடற்பயிற்சியாகச் செய்கையில், நடப்பது இதயத்திற்கு நல்லது என்று பல்லாண்டு காலமாகக் கூறப்பட்டு வருகிறது. அண்மையில், மனச்சோர்வு, அறிவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கும் நடைப்பயிற்சி மருந்தாக அமையும் எனக் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், 'வைலி இணைய நூலகம்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வுக் கட்டுரையானது, மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் உதவும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்விற்காக 50 வயதிற்கு மேற்பட்ட, முழங்கால் கீல்வாத பாதிப்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வாளர்கள் கருத்தாய்வு மேற்கொண்டனர்.
பங்கேற்பாளர்கள் எவ்வளவு உடற்பயிற்சி மேற்கொண்டனர், கீல்வாதத்திற்கான அறிகுறிகள், வலியின் தீவிரத்தன்மை ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
நான்காண்டுகளுக்குப் பிறகு, நடைப்பயிற்சி செய்யாத 37 விழுக்காட்டினர் அடிக்கடி வலியால் அவதிப்பட்டது தெரியவந்தது. நடைப்பயிற்சி மேற்கொண்டோரில் 26 விழுக்காட்டினருக்கு மட்டுமே அத்தகைய வலி ஏற்பட்டது.
மூட்டுகளில் ஏற்படும் அழற்சியே கீல்வாதம் எனப்படுகிறது. அதிலும், மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் முறிவதால் ஏற்படும் 'ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்' எனப்படும் தேய்மான கீல்வாதத்தால்தான் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக, இடுப்பு, முழங்கால், தண்டுவடம் போன்ற எடையைத் தாங்கும் மூட்டுகளில் இந்த பாதிப்பு ஏற்படும். கைவிரல்கள், கட்டைவிரல், கழுத்து, கால் பெருவிரல் ஆகிய உறுப்புகளும் இதனால் பாதிக்கப்படலாம்.
இந்நிலையில், எல்லாரும் எவ்விடத்திலும் எளிதாகச் செய்யக்கூடிய நடைப்பயிற்சி முழங்கால் வலியில் இருந்து விடுதலை தரக்கூடும் என்பதைத் தங்களது ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவக் கல்லூரியின் துணைப் பேராசிரியர் கிரேஸ் சியோ வெய் லோ கூறினார்.
உடற்பயிற்சி, தசைகளையும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைநார்களையும் வலுப்படுத்துகிறது. அத்துடன், இடுப்பு, கைகள், கால்கள் போன்ற மற்ற மூட்டுப்பகுதிகளிலும் கீல்வாத பாதிப்பைக் குறைக்க உடற்பயிற்சி உதவலாம் என்றும் தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் திருவாட்டி கிரேஸ் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே வலியால் துன்புறுவோர் மிகையாக உடற்பயிற்சி செய்யாதபடி கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் நியூயார்க் லேங்கான் சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜஸ்டின் எல்பயர்.
நீண்ட நேரம் நடப்பது, கடுமையான கீல்வாதம் உள்ள சில நோயாளிகளுக்கு வலியை அதிகப்படுத்திவிடலாம் என்றார் டாக்டர் ஜஸ்டின். அதே நேரத்தில், இலேசான கீல்வாத வலி இருப்போருக்கு நடைப்பயிற்சி சிறந்ததொரு உடற்பயிற்சி என்று அவர் குறிப்பிட்டார்.
முதலில் குறைவான தொலைவிற்கு நடக்கத் தொடங்கி, பின்னர் படிப்படியாகத் தொலைவை அதிகரிக்க வேண்டும் என்பது டாக்டர் ஜஸ்டினின் பரிந்துரை.
எல்லாவற்றிற்கும் மேலாக, நடைப்பயிற்சிக்கு ஒரு காசுகூட செலவிடத் தேவையில்லை.

