லண்டன்: பத்து மாதங்களுக்கு முன் படகோட்டம் மேற்கொண்டபோது ஆற்றில் திறன்பேசியைத் தவறவிட்ட ஆடவர், செயல்பாட்டு நிலையில் அது திரும்பக் கிடைத்ததைத் தம்மால் நம்பவே முடியவில்லை என்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தின் குளோஸ்டரில் உள்ள ரை ஆற்றில் படகோட்டம் மேற்கொண்டபோது, ஒவைன் டேவிஸ் (படம்) என்ற இந்த ஆடவரின் ஐஃபோன் கைநழுவி ஆற்றில் விழுந்துவிட்டது.
இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் தமது குடும்பத்துடன் அந்த ஆற்றில் படகோட்டம் மேற்கொண்ட மிகெல் பாச்செக்கோ எனும் ஆடவர், டேவிசின் திறன்பேசியைக் கண்டு எடுத்தார்.
வீடு திரும்பியபின் அதனைக் காயவைத்த திரு மிகெல், அந்தத் திறன்பேசியின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் இணையத்தில் அதுகுறித்த படங்களைப் பதிவிட்டார்.
"முழுக்கவும் நீராக இருந்ததால் அது இயங்கும் என்று நான் நினைக்கவில்லை," என்றார் திரு மிகெல்.
பல முக்கியத் தகவல்களும் படங்களும் இருக்கலாம் என்பதால் அத்திறன்பேசியை உலர்த்த தாம் பெருமுயற்சி எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
"எனது திறன்பேசி தொலைந்துபோனால் நான் எந்த மனநிலையில் இருப்பேன் என்பதை அறிவேன். அதில் என் குழந்தைகளின் பல படங்கள் உள்ளன. அதனால், எப்படியும் அது திரும்பக் கிடைக்கவே விரும்புவேன்," என்றார் திரு மிகெல்.
உலர்த்திய திறன்பேசியைக் காலையில் மின்னூட்டியுடன் இணைத்தபோது தம்மால் நம்பவே முடியவில்லை என்றார் அவர்.
திறன்பேசியின் முகப்புத்திரையில் 13 ஆகஸ்ட் என்ற தேதியுடன் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து நிற்கும் படம் தோன்றியது. திறன்பேசி ஆற்றில் விழுந்ததும் அதே நாளில்தான்.
அதனைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் குழுப்பக்கம் ஒன்றின் வழியாக அப்படங்களைத் திரு மிகெல் பதிவிட்டார். அவை 4,000க்கும் மேற்பட்ட முறை பகிர்ந்துகொள்ளப்பட்டன.
திறன்பேசிக்கு உரியவரான ஒவைன் டேவிஸ் ஆறு மாதங்களாகச் சமூக ஊடகங்கள் பக்கம் தலைகாட்டாதபோதும், அவரது மற்றும் அவருடைய காதலி ஃபியோனா கார்ட்னரின் நண்பர்கள் அதனைக் கண்டுகொண்டனர்.
"அந்த நாளில் இருவர் மட்டும் செல்லக்கூடிய படகில் நானும் என் காதலியும் சென்றோம். அப்போது, என் காதலி எழுந்து நின்றதால் நிலை தடுமாறி இருவரும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டோம். எனது காற்சட்டையின் பின்புறம் வைத்திருந்த திறன்பேசியும் நீரில் விழுந்துவிட்டது," என்று நிகழ்ந்ததை விவரித்தார் திரு டேவிஸ்.
திறன்பேசியை ஒப்படைக்க திரு மிகெல் எடுத்த பெருமுயற்சியால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

